"அது" வதந்தி.. எங்களுக்கு சம்பந்தமே இல்லை.. நாங்க அப்படிப்பட்டவர்கள் இல்லை.. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்
சாத்தான்குளம் சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கூறியுள்ளது
சென்னை: சாத்தான்குளம் கொடூர காவல் நிலைய மரண சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அந்த அமைப்பு மறுத்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் நாட்டையே உலுக்கி விட்டது. நிர்பயா வழக்கை விட மோசமானது இது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவே கொந்தளித்துப் போய் விட்டார்.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையும், மக்களும் கொந்தளித்துப் போய் விடவே, இப்போது ஹைகோர்ட் கிளையின் அடுத்தடுத்த உத்தரவுளைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறையினருக்கு உதவும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு மீது சரமாரியாக புகார்கள் குவிகின்றன. அதாவது சம்பவத்தன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இவர்களில் சிலர் இருந்ததாகவும், அவர்களும் ஜெயராஜ் - பென்னிக்ஸை தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் மேலும் பரபரப்பு கூடியது.
தமிழகம் முழுவதும் யார் இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற விவாதம் வெடித்தது. குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்த சிலர் இதில் புகுந்து விட்டதாகவும் கூட பரபரப்பு கிளம்பியது. இந்த நிலையில்தான் இந்த அமைப்பு இப்போது ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது. அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜி. லூர்துசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சாத்தான்குளம் வழக்கில் எங்களது வாலன்டியர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சிலர் புகார் கூறி வருகினறனர். இதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். உள்ளூர் காவல் நிலையத்தில் கொரோனா பணிகளுக்காக சில வாலன்டியர்களை நியமித்துள்ளனர் என்று அறிகிறோம்.. ஆனால் அவர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிடையாது.
காவல்துறையினருக்கு உதவும் அனைத்து வாலன்டியர்களும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போது கேள்விக்குள்ளாகியுள்ள வாலன்டியர்களும் கூட, எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது எங்களிடம் பயிற்சியைப் பெற்றவர்களோ அல்லது எங்களது அடையாள அட்டை தரித்தவர்களோ கிடையாது.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பில் உறுப்பினராவதற்கு கடுமையான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் இதற்கு உண்டு. சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருடனும் நாங்கள் துணை நிற்கிறோம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். அப்போதுதான் உண்மை என்ன என்பது தெரிய வரும். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சமூகப் பணியாற்றி வருகிறது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், சட்டத்திற்குட்பட்டே செயல்படுகிறோம். அனைத்து வகையான சித்திரவதைகளுக்கும் நாங்கள் எதிரானவர்கள்.
சாத்தான்குளம் சம்பவம் போல் இனிமேல் நடக்கக் கூடாது.. மனிதனை மனிதனே அடிக்கக் கூடாது.. நீதிபதிகள்
எங்களது அமைப்பின் அடையாள அட்டையை போலியாக தயாரித்து சிலர் பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடும் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எங்களது அமைப்பில் எந்த அரசியல் அமைப்புடனும் தொடர்புடைய யாரையும் நாங்கள் இணைத்துக் கொள்வது இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
எங்களது அமைப்பின் பெயரையோ அல்லது அடையாள அட்டை உள்ளிட்டவற்றையோ யாரேனும் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனரா என்பதை விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக தகவல்கள் கேட்டுள்ளோம். அதுபோல யாராவது செயல்பட்டிருந்தால், களங்கம் அமைப்பின் பெயருக்கு களங்கள் விளைவிப்பது போல நடந்திருந்தால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்டும் என்று அந்த அறிக்கையில் அந்தோணிசாமி கூறியுள்ளார்.