"பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்".. சேவாபாரதி.. இவர்களையும் விசாரிங்க... வியாபாரிகள் அதிரடி கோரிக்கை!
சென்னை: சாத்தான்குளம் விவகாரத்தில் ஒவ்வொருவராக கைதாகி வருகிறார்கள், ஆனால் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இளைஞர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை அவர்களிடம் விசாரணை கூட நடத்தவில்லையே என்றும் வியாபாரிகள் தரப்பு ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது.
இன்னொரு பக்கம், தமிழக வாழ்வுரிமை அமைப்போ, இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பே சட்டரீதியானது, அதை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்றொரு பக்கம், அப்பாவையும், மகனையும் அடிச்சது, பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸே இல்லை அவர்கள் கொரோனா தன்னார்வலர்கள் என்ற ஒரு புது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
காவலர் முத்துராஜ் நள்ளிரவில் அதிரடி கைது.. பாய்ந்தது கொலை வழக்கு.. ஜூலை 17 வரை நீதிமன்ற காவல்
குழப்பம்
ஆக, சாத்தான்குளம் சம்பவத்தின்போது உள்ளே இருந்தவர்கள் யார் என்பதும் இன்னொரு குழப்பமாகியுள்ளது. அவர்கள் யார் என்ற அடையாளம் இதுவரை வெளியில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக சாட்சியம் அளித்துள்ள காவலர் ரேவதி அதுகுறித்த உண்மைகளைத் தெரிவித்திருக்கக் கூடும்.
பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்
எனவே உள்ளே இருந்தவர்கள் யார் என்பது உறுதியாக தெரியாத நிலையில் நாமாக யாரையும் குற்றம் சாட்டவும் முடியாது. இது ஒரு புறம் இருக்கட்டும். முன்னாள் காவல்துறை அதிகாரியான பிலிப் என்பவர்தான் இந்த ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை நிறுவியவர். போலீஸாருக்கு உதவியாக இருப்பவர்கள் தான் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனப்படும் காவல்துறை நண்பர்கள்... காவல்துறையினரின் வேலைப்பளுவை குறைக்க அவர்களுடைய சின்னச் சின்ன வேலைகளை பார்த்துக் கொள்ளும் நோக்கில்தான் இந்த அமைப்பே உருவாக்கப்பட்டது.
வழக்குகள்
ஆரம்ப காலத்தில் இவர்கள் மீது எந்த சர்ச்சையும் வரவில்லை. ஆனால் இவர்களை வழக்குகளில் சரியாக பயன்படுத்தி கொள்வதைவிட, தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்வதே அதிகம் என்ற புகார்கள் பின்னாளில் கிளம்பின. பார்ப்பதற்கு போலீஸ் போலவே இருப்பதால் இவர்களில் சிலர் சில நேரங்களில் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சர்ச்சைகள் வந்ததுண்டு. இவர்களுக்கான வரைமுறைகள் என்ன என்பது தெரியவில்லை.
வேல்முருகன்
இது ஒரு பக்கம் இருக்கட்டும். இடையில் சேவா பாரதி என்ற அமைப்பும் இந்த சீனில் நுழைகிறது. இவர்கள் யார் என்பதில் தெளிவு இல்லை. ஆனால் சேவா பாரதி என்பது ஒரு மதவாத பின்னணி கொண்டது என்கிறார்கள்... இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் "பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற சட்டவிரோத அமைப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் துணை அமைப்பான 'சேவா பாரதி' உறுப்பினர்கள் அதிகம் பேர் பங்கு வகிப்பதும், இவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக் கைதிகளை அடித்துச் சித்திரவதை செய்வதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன... அதனால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற அமைப்பையும், சேவா பாரதி என்கிற அமைப்பையும் மொத்தமாக தடைசெய்ய வேண்டும்" என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர்
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காரணம் சாத்தான்குளம் பிரச்சினைக்கு பிறகுதான் இந்த இரு அமைப்புகளும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன, விவாதத்துக்குள்ளாகியுள்ளன. இதில் ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மிகத் தெளிவாக "எங்களுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. யாரேனும் எங்களது பெயரை தவறாகப் பயன்படுத்தியிருந்தால் விசாரித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்" என்று கூறியுள்ளார்.
Recommended Video
சீர்திருத்தம்
இது வரவேற்கப்பட வேண்டியதுதான். அவர்களும் விசாரிக்க வேண்டும், அதேபோல காவல்துறையினரும் விசாரிக்க வேண்டும். உண்மையில் யார் தாக்குதலின்போது உடன் இருந்து கூடவே சேர்ந்து தாக்கியது என்பது தெளிவாகும் பட்சத்தில் இது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் பல சீர்திருத்தங்களை செய்வதற்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் வியாபாரிகளின் கோரிக்கையை நிராகரிக்காமல் அதையும் தீவிரமாக விசாரிப்பது காவல்துறையின் நற்பெயரையும் சரி செய்ய உதவும். அதி வேகமாக செயல்பட்டு மக்கள் மற்றும் ஹைகோர்ட்டின் பாராட்டைப் பெற்ற சிபிசிஐடி போலீஸார் நிச்சயம் இதையும் கிண்டி எடுப்பார்கள் என்று நம்பலாம்.