தமிழகத்தின் இதயத்தையே புரட்டி போட்ட சாத்தான்குளம் வழக்கு.. அடுத்து விசாரிக்க போகும் நீதிபதி யார்?
சாத்தான்குளம் வழக்கை அடுத்து விசாரிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: தமிழகத்தையே புரட்டி போட்டுள்ள சாத்தான்குளம் வழக்கை அடுத்து எந்த நீதிபதி விசாரிப்பார் என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் உள்ளனர்.
வழக்கமாக மதுரை ஹைகோர்ட்டுக்கு 3 மாசத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நீதிபதிகள் பணி செய்வது வழக்கம்.. இது வழக்கமான ஒன்று.. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் நீதிபதிகள் மாறி மாறி பணியாற்றுவார்கள்.
அந்த வகையில், மதுரை ஹைகோர்ட்டில் 3 மாசத்துக்கு மேலாக நீதிபதியாக பணிபுரிந்து வந்த நீதிபதி பிரகாஷ், அந்த சுழற்சி முடிந்து தற்போது சென்னை ஹைகோர்ட்டுக்குத் திரும்புகிறார். அவருக்கு பதிலாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் மதுரை பெஞ்சுக்கு வருகிறார்.
நீதிபதி பிரகாஷ், நீதிபதி புகழேந்தி ஆகியோர் கொண்ட பெஞ்ச்தான் சாத்தான்குளம் விவகாரத்தை சுவோமோட்டாவாக கையில் எடுத்து வழக்குப் பதிவு செய்தது. தற்போதைய நீதிபதி சென்னைக்குத் திரும்புவதால் அடுத்து இந்த வழக்கு யாரிடம் விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த வழக்கை மதுரை பெஞ்ச் கையில் எடுத்ததும்தான் அடுத்தடுத்து நடவடிக்கைகள் வேகம் பெற்றன. காவலர்கள் கூண்டோடு மாற்றப்பட்டனர். இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதிரடியாக கைதும் செய்யப்பட்டனர். இதையடுத்து நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கி இருப்பதாகவும், அவர்களைப் பாராட்டுவதாகவும் மதுரை பெஞ்ச் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக சாட்சி அளித்த பெண் போலீஸ் ரேவதியை தொடர்பு கொண்டு "நாங்கள் இருக்கிறோம்" என்று தைரியம் தந்தது. அத்துடன், உண்மையை பேசிய காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், விடுப்புடன் கூடிய ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவும் பிறப்பித்தது.
இதனிடையே, கைது செய்தவர்களை எந்த கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் என்று சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் கேள்வி எழுப்பியது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்கை "நீதிமன்றம் கண்காணிக்கிறது" என்ற வார்த்தையை கூறி தன் இருப்பின் முத்திரையை இந்த வழக்கின் முதல்நாளிலேயே பதித்தது.
சினிமா பாணியில் சுற்றி வளைத்த ரவுடிகள், டிஎஸ்பி உள்பட 8 போலீஸ்காரர்களை கொன்றது எப்படி?
இந்த அளவுக்கு, வழக்கு துரிதமாக, நியாயமாக, நடந்து வருகிறது என்றால் அத்தனைக்கும் காரணம் மதுரை ஹைகோர்ட்தான்.. அந்த வகையில், இனியும் இந்த வழக்கு அதே பாதையில் செல்லும் என்று நம்பப்படுகிறது.. காரணம், இந்த உத்தரவுகளை பிறப்பித்த நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோருக்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
மக்களும் நீதிமன்ற நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.. தற்போது இரு வாய்ப்புகள் உள்ளன. இது சுவோமோட்டா கேஸ் என்பதால் நீதிபதி பிரகாஷ், மதுரை பெஞ்ச் நீதிபதி புகழேந்தியுடன் இணைந்து சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிகிறது.
அல்லது, புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள சத்தியநாராயணாவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்தவும் வாய்ப்புண்டு. வழக்குகள் பட்டியலிடப்படும்போது இதுகுறித்துத் தெரிய வரும். இந்த வழக்கின் போக்கு தமிழக மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பதால் இந்த விசாரணையும் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளது.