Revathy: கொதித்தெழுந்த 3 பெண்கள்.. கனிமொழி - ரேவதி - சுசித்ரா.. முதல்வெற்றி.. என்னவென்று பாராட்டுவது
3 பெண்களின் துணிச்சலே சாத்தான்குளம் விவகாரம் சூடு பிடிக்க காரணமாகும்
சென்னை: முதலில் இந்த 3 பெண்களுக்கு ஒரு பெரிய சபாஷ் போட வேண்டும்.. திமுக எம்பி கனிமொழி, பாடகி சுசித்ரா, பெண் போலீஸ் ரேவதி! சாத்தான்குளத்தில், 2 படுகொலைகளும் ஸ்டேஷன் வாசலோடு முடிந்து போயிருக்க வேண்டியதை, வெட்ட வெளிச்சமாக்கி, நீதிக்கு பாதை விரித்தவர்களும், சட்டத்தை கையில் எடுக்க நியாயத்திற்கு தூண்டியவர்களும் இந்த 3 பெண்கள்தான்!
கனிமொழியை பொறுத்தவரை, தன்னுடைய சொந்த தொகுதியில் நடந்த சம்பவம் இது... லேசில் விட்டுவிட மாட்டார்.. விடவும் முடியாது.. இந்த மரணத்தை முதலில் எல்லோருமே கண்டித்து அறிக்கைதான் விட்டனர்..
ஆனால், மகனையும், கணவனையும் இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கண்ணீரை உணர்ந்த கனிமொழி, டிஜிபி ஆபீசுக்குள் அதிரடியாக நுழைந்து புகார் தந்தார்.
லாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டம்.. அமித்ஷாவுக்கு கனிமொழி கடிதம்
அமைதி
டிஜிபி ஆபீசுக்கு செல்வதற்கு கட்சி தலைமையின் அனுமதியைக் கூட எதிர்பார்க்கவில்லை.. இது கட்சி சார்பானதும் இல்லை.. இரு உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டதே என்ற ஆதங்கம்தான் இதற்கு காரணம். இவரது செயல்பாடை பார்த்துதான் தலைமையே அடுத்தடுத்து களமிறங்கியது.. மற்ற கட்சிகளும் சுதாரித்தன..
பாதுகாப்பு
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சோகத்தில் முழுமையாக பங்கேற்று கொண்டு, இறுதி ஊர்வலத்திலும் கனிமொழி கலந்து கொண்டார். இந்த விஷயத்தில், தன் பாதுகாப்பு உட்பட கனிமொழிக்கு நிறைய சிக்கல்கள் மறைமுகமாக வந்தன என்றே சொல்ல வேண்டும்.. அனைத்தையும் கடந்து முதல் அரசியல் கட்சி பெண்ணாக சாத்தான்குளத்தை அதிர வைத்தார்.
நிர்வாணம்
இதற்கடுத்ததாக, பின்னணி பாடகி சுசித்ராவின் கண்டனம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.. "அவர்களின் ஆசன வாயில் லத்தியை சொருகி இருக்கிறார்கள். அவர்கள் மொத்தமாக நிர்வாணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் சிசிடிவி இல்லாத இடத்தில் வைத்து அவர்களை அடித்து தாக்கி இருக்கிறர்கள்.. அவர்களின் ஆசன வாயை ரொம்ப மோசமாக சேதப்படுத்தி உள்ளனர்.
சேதமான உறுப்பு
திரும்ப திரும்ப ஆசன வாயில் குச்சிகளை சொருகி உள்ளனர்... அவர்களின் பின் பக்கம் கிழியும் வரை இந்த கொடூரம் நடந்துள்ளது. அவர்களின் ஆண் உறுப்பு மிக மோசமாக சேதப்படுத்தப்பட்டு உள்ளது... அவர்களின் நெஞ்சு பகுதியிலும் சேதம் உள்ளது.. ரத்தம் படிந்த உடைகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.. இவர்கள் கதை நாடு முழுக்க தெரிய வேண்டும், ஷேர் செய்யுங்கள்" என்றார்.
படுகொலை
படுகொலைக்கு நியாயம், நீதி வேண்டும் என்று அனைவரும் கேட்டு கொண்டிருக்க, சுசித்ரா மட்டும்தான் துணிச்சலாக இந்த வீடியோவை போட்டு மொத்த அக்கிரமத்தையும் புட்டு புட்டுவைத்தார்.. அந்த நேரத்தில் இவையெல்லாம் உறுதிப்படாத தகவலாக இல்லாவிட்டாலும்கூட, முதன்முதலில் ஸ்டேஷனில் நடந்த விஷயத்தை சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்... அரசல் புரசலாக பேசிக் கொண்டிருந்தவர்கள், சுசித்ராவின் வீடியோவை உண்மையிலேயே ஷேர் செய்தனர்.. படு வைரலாக போனது இந்த வீடியோ. மக்கள் கொந்தளிக்க சுசித்ராவின் வீடியோவும் ஒரு காரணம்.
பெண் போலீஸ்
இந்த வழக்கை பொறுத்தவரை அதிமுக்கியமான சாட்சி பெண் போலீஸ் ரேவதி.. இந்த பெண்ணுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? காவல்துறையில் மேலதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு பல பெண் போலீஸ்கள் அடங்கி கிடக்கும் நிலையில், சாட்சியாக இவர் வந்து நின்றது அந்த நீதிதேவதையே வந்து நின்றதுபோல இருந்தது.
நீதி தேவதை
எங்கோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், அப்படியே அமுங்கி மூடி மறைக்கப்பட்டுவிடுமோ என்று தமிழகமே பதறிய நேரத்தில் இந்த நீதி தேவதை வந்து நின்றதும், ஒவ்வொரு வார்த்தையையும் ஆணி அடித்தாற்போல பேசியதும் தமிழகத்தை மலைக்க வைத்தது! இனி இந்த வழக்கு முடியும்வரை ரேவரி என்ற சாட்சியத்தின் வாக்குமூலம் இறுதிவரை கூடவே வரும்.. இந்த ரேவதியின் முகம் எப்படி இருக்கும் என்றுகூட நமக்கு தெரியாது.. ஆனால், இதுபோன்ற ரேவதிகள் காவல்துறையில் இருக்கும்வரை, மக்களுக்கு நீதியின்பால் பிடிப்பு விட்டு போகாது!
நீதி - நியாயம்
துடித்து துடித்தே உயிரிழந்த 2 பேரின் மரணத்துக்கும், இறுதியில் ஒரு நியாயம் கிடைக்கும் என்றால், நீதி நிலைநாட்டப்படும் என்றால், அதில் இந்த 3 பெண்களுக்கும் உரிய பங்கு இருக்கும் என்பதை எவராலும் மறுக்க முடியாது!