சாத்தான்குளம்.. ரஜினி ஏன் வாயே திறக்காமல் அமைதியாக உள்ளார்.. மனசை உலுக்கவில்லையா.. மக்கள் கேள்வி!
சாத்தான்குளம் மரணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் உள்ளார்
சென்னை: சாத்தான்குளம் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏன் வாயை திறக்காமல் உள்ளார்? ஏன் ஒரு கண்டனம் கூட சொல்லவில்லை என்பது தமிழக மக்களின் சந்தேகமாக எழுந்துள்ளது.
Recommended Video
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தையும், மகனும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.. இதனால் மக்கள் கொதிப்பில் உள்ளனர்.. முறையான விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
ஊரே சாத்தான்குளம் சம்பவத்திற்காக குரல் கொடுத்து வருகிறது.. அவ்வளவு ஏன், வட இந்திய நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள்கூட, இந்த கொடுமையான மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. ராகுல் காந்தி கூட தமிழில் டிவீட் போட்டு கண்டித்திருக்கார். பல தமிழ்நாட்டு நடிகர் நடிகைகளும் குரல் கொடுத்துள்ளனர்.
"கஸ்டடி டெத்" கண்டிக்கத்தக்கது.. எச்.ராஜா ட்வீட்.. "4 நாளா எங்க போயிருந்தீங்க".. நெட்டிசன்கள் கேள்வி
ஆன்மீக அரசியல்
ஆனால் ஆன்மீக அரசியல் என்ற பெயரில் கடந்த 2 வருடமாக அவ்வப்போது திடீர் திடீரென ஏதாவது பேசிக் கொண்டு இருக்கிற ரஜினிகாந்த் ஏன் இதை பற்றி எதுவுமே பேசவில்லை என்ற சந்தேகம் எழுகிறது.. நடந்த சம்பவம் குறித்து கோர்ட்டில் கேஸ் நடக்கிறது என்பதால், சம்பவத்தை அக்குவேறு, ஆணி வேறாக விமர்சிக்க முடியாதுதான்.. ஆனால் இந்த கொடூரத்தை முதலில் தானாக முன்வந்து வழக்காக எடுத்து கொண்டதே கோர்ட்தான்.. அப்படி இருக்கும்போது, மற்ற பிரமுகர்கள் போலவாவது ரஜினி இதற்கு கண்டனம் சொல்லி இருக்கலாம்.
இரட்டை மரணம்
இயல்பாகவே தமிழக மக்கள் உ ணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.. ஒரு உயிர் இறந்துவிட்டால் துடித்து போகக்கூடியவர்கள்... இப்போது இரட்டை மரணம் நடந்துள்ளது. அதுவும் கொடுமையான முறையில். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நேரத்தில்தான் ஆறுதல் தர வேண்டும்.. அந்த கொந்தளிப்பை ஆசுவாசப்படுத்த வேண்டும்.. ஒரு தாய், தன் கணவனையும், மகனையும் ஒரே நேரத்தில் அநியாயமாக பறிகொடுத்துவிட்டு, மகள்களுடன் கதறி கொண்டிருக்கிறார்... அந்த தாயின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆறுதல் வார்த்தையை ரஜினி இந்நேரம் சொல்லியிருக்க வேண்டும்.
அமைதி ஏன்?
ரஜினி அமைதியாக இருந்தாலும் குற்றம், வாயை திறந்தாலும் அதிலும் ஏதாவது குற்றம் கண்டுபிடிப்பவர்கள் இப்போதும் இருக்கதான் செய்கிறார்கள்.. ஆனால் நடந்த சம்பவம் அப்படி இல்லை.. கிட்டத்தட்ட தூத்துக்குடி சம்பவம் போலத்தான்.. இதைதான் விசிகவின் ஆளூர் ஷாநவாஸ் 2 நாளைக்கு முன்னாடி கேள்வியாக எழுப்பியிருந்தார்.
பேச வேண்டும்
"ரஜினி சார்.. சீருடைக்கு நீதி கேட்டீங்களே.. இன்று போலீசால் தாக்கப்பட்டு பலியாகியுள்ள அப்பாவிகளுக்காகவும் பேச வேண்டும்... போலீசை தாக்கிய குற்றவாளி எவரும் தப்ப முடியாது. ஆனால், யாரை தாக்கினாலும் போலீஸ் தப்பி விடுகிறது எனவே பெரும் குரல் இதற்கே தேவை!..." என்று பதிவிட்டிருந்தார். ஷா நவாஸின் இந்த பதிவும், அதில் உள்ள கோபமும் நியாயமானதே.. சென்னையில் அன்று ஐபிஎல் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில், விசிக பிரமுகர் ஒருவர் போலீஸ்காரரின் சட்டையை பிடித்து இழுத்ததற்கே கொந்தளித்து பேசியவர் ரஜினிகாந்த்.
நியாயமா?
"போலீஸ்காரர்கள் நமக்காக பாதுகாப்பு பணியில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? அவர்களை சட்டையை பிடிப்பது நியாயமா? வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான்" என்று ஆவேசமாக பேசியிருந்தார். இன்று அதே காவல்துறையைச் சேர்ந்த சிலர் தாக்கி 2 உயிர் பறிபோயுள்ளதாக கூறப்படுவதற்கு ஏன் அவர்களை கேள்வி கேட்கவில்லை?
எச்.ராஜா
பாஜகவின் எச்.ராஜாவே இன்று வாய்திறந்து, வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார். நடந்த சம்பவத்துக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அதுவே மிகப் பெரிய ஆச்சரியம்தான்.. அவர் தைரியமாக கண்டித்துள்ளார். ஆனால் ரஜினி இதுவரை வாயே திறக்கவில்லை. இனியாவது வாய் திறப்பாரா? அநியாயத்தை கண்டு பொங்குவாரா? இப்போது வாய் திறக்காவிட்டால், "அண்ணாத்தே" படம் வெளியாகும்போதும் வாய் திறக்கக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!