எல்லாத்துக்கும் காரணம் மாஜிஸ்திரேட்டுதான்.. ரத்தம் எப்படி வந்ததுன்னு கேட்டாரா.. சந்துரு கேள்வி
சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கே.சந்துரு கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: எல்லாத்துக்கும் காரணம் சாத்தான்குளம் மேஜிஸ்திரேட்டுதான்.. ஏன் காயங்கள் உடம்பில் உள்ளது.. ஏன் ரத்தப்போக்கு ஏற்பட்டன? இப்படி எல்லாம் அவர் கேட்டிருக்க வேண்டாமா? அப்பாவும் மகனும் சுறுசுறுப்பாக காணப்பட்டாலும்கூட, மாஜிஸ்திரேட் அந்த போலீசாரிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்... அதுதான் ஒரு மாஜிஸ்திரேட்டின் வேலை? இதை செய்தாரா அவர்?" என்று காட்டமான கேள்விகளை ஓய்வுபெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு எழுப்பி உள்ளார்.. அத்துடன் சம்பந்தப்பட்ட மேஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
சாத்தான்குளம் விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபமெடுத்துவிட்டது.. ஒவ்வொருவடைய கருத்துக்களும், கண்டனங்களும் கொதிப்புடன் வெளிவருகின்றன.. உண்மையிலேயே இந்த விவகாரம் இந்த அளவுக்கு பூதாகரமாக வெடித்து கிளம்பும் என்று தமிழக அரசு சத்தியமாக நினைக்கவில்லை.. சில கொடூர குணம் படைத்த போலீஸ்காரர்களால் அரசு பதில் சொல்ல வேண்டிய நிலைமைக்கு இன்று ஆளாகி உள்ளது.
இந்த சாத்தான்குளம் மரணத்தை நிர்பயா படுகொலையுடன் மார்க்கண்டேய கட்ஜு ஒப்பிடும்போதே இதன் சீரியஸ்தன்மை தெரியவருகிறது.. இந்த கொலையில் போலீசார் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்று கட்ஜுஆவேசமாகி உள்ளார்
சாத்தான்குளம் சம்பவத்திற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை உகந்தது - ப.சிதம்பரம்
கே.சந்துரு
இப்போது சென்னை ஹைகோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு ஒரு கருத்தை சொல்லி உள்ளார்.. ஆனால் இந்த மரணத்துக்கு போலீசார் மீது அனைவரும் குற்றம் சொல்லி கொண்டிருந்தால், சந்துருவின் கண்ணோட்டமே வித்தியாசமாக உள்ளது.. இந்த கொடூரத்துக்கு எல்லாம் காரணமே சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் தான் என்று அடித்து சொல்கிறார்.. அவரை பணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.
வழிகாட்டுதல்கள்
"சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் பி.சரவணனை, நீதித்துறையின் முறையற்ற செயலுக்காகவும். கைது செய்யப்படும்போது சுப்ரீம்கோர்ட் வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும் இந்த வழக்கில் அவருடைய தவறான நடத்தை தெளிவாக உள்ளது.. அதனால் முதலில் அவரை பணி நீக்கம் செய்யப்பட செய்யப்பட வேண்டும்.
நடைமுறைகள்
போலீசார் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.. கைது செய்யப்படும்போது பின்பற்றவேண்டிய சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து வழிகாட்டுதல்களை மாஜிஸ்திரேட் பின்பற்றவில்லை.. மொத்த நடைமுறையையும் கைவிட்டுள்ளார்... குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது எந்தவிதமான புகாரும் தெரிவிக்கவில்லை என்று மாஜிஸ்திரேட் இதிலிருந்து தன் பொறுப்பை தட்டி கழித்துவிட முடியாது..
கேள்விகள்
அவர்கள் கடுமையாக காயமடைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தால், அந்த காயங்களை அவர் விசாரித்திருக்க வேண்டும்... தந்தையும் மகனும் சுறுசுறுப்பாக காணப்பட்டாலும்கூட, மாஜிஸ்திரேட் அந்த போலீசாரிடம் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்... அதுதான் ஒரு மாஜிஸ்திரேட்டின் வேலை.
உடல்நலம்
போலீஸ் காவலில் உள்ள எந்தவொரு குற்றவாளியும் அவர் காவலில் சித்திரவதை செய்யப்பட்டார் என்று மாஜிஸ்திரேட்டிடம் சொல்வதற்கு தைரியம் இருக்காது.. குற்றம் சாட்டப்பட்டவர்களை சோதிப்பது ஒரு மாஜிஸ்திரேட்டின் வேலை... அவர்கள் ஏன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்? ஏன் காயங்கள் அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டன? ரிமாண்ட் செய்யப்படுவதற்கு முன்பு போலீசார் அவர்களுடைய உறவினர்களிடம் தெரிவித்தார்களா? அவர்களுக்கு ஒரு வக்கீல் இருக்கிறாரா? என்று இப்படியெல்லாம் அவர் கேட்டிருக்க வேண்டும்.
அரசியலமைப்பு
இந்த அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை மாஜிஸ்திரேட் உறுதி செய்திருக்க வேண்டும்.. போலீஸ் சித்திரவதை என்பது ஒரு புதிய அதிகார கட்டமைப்பின் விளைவாக பொது முடக்கத்திற்கு பிறகு வடிவம் பெற்றுள்ளது.. முழு அதிகாரமும் இப்போது போலீஸ் மற்றும் அதிகார மையங்களின் கைகளில் உள்ளது. இப்போது நிலைமை என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர்கூட தன் வீட்டு வாசலில் மட்டும்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியும்.
விதிமீறல்கள்
இருந்தாலும், நாடார் போன்ற ஒரு சக்திவாய்ந்த வர்த்தக சமூகத்தின் ஆதரவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக்களை தூண்டியது. ஆனால், இதே போன்ற மீறல்கள் நடந்து கொண்டிருக்கலாம்... நீதிமன்றம் கூட இங்கு உதவவில்லை... இந்த வழக்கில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் பி.சரவணனின் தவறான நடத்தை தெளிவாக உள்ளதால் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று சந்துரு தன் கருத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்தி உள்ளார்.