எல்லாத்துக்கும் காரணம் இவர்தான்.. கையை காட்டும் சீனியர்கள்.. டென்ஷனில் ஸ்டாலின்!
சென்னை: திமுக மூத்த தலைகள் எல்லாம் எக்கச்சக்கமான டென்ஷனில் உள்ளார்களாம்.. திமுக தலைவரோ அதற்கு மேல் இருக்கிறாராம்! இது எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா? ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தான் என்கிறது கட்சி தரப்பு!
நமக்கு நாமே சுற்றுப் பயணத்தின்போது, ஸ்டாலினின் கலர் கலர் டீ-சர்ட், சைக்கிள் பயணம், டீ கடையில் டீ குடித்தது, பஸ்களில் சென்று கொண்டிருந்தவர்களிடம் செல்பி என இதற்கெல்லாம் ஐடியா கொடுத்தது சபரீசன்தான் என்று அப்போது சொல்லப்பட்டது.
ஆனால் கருணாநிதி இறந்தபிறகு நேரடியாக களத்துக்கு கொண்டுவரப்பட்டார். டெல்லி அரசியல் விவகாரம் என்றால் டி.ஆர். பாலுவும், கனிமொழியும் பார்த்து கொள்வார்கள் என்றுதான் கருணாநிதி நம்பிக்கையுடன் இருப்பார். இல்லையென்றால், தயாநிதி மாறன். ஆனால் சோனியா காந்தியை சந்திக்க செல்லும்போது சபரீசனையும் அழைத்து கொண்டு போனார் ஸ்டாலின். தயாநிதி மாறன் இடத்தில் சபரீசனா என்று ஷாக்கானார்கள் தொண்டர்கள்.
"தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க".. பிரேமலதா வந்த பாரம்பரியம் இது!
இழுபறி
10 நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. 15 சீட்டுக்கு குறையாமல் வேண்டும் என்றது காங்கிரஸ். ஒற்றை இலக்கைதான் தர முடியும் என்றது திமுக. இதை சரிக்கட்டும் பொறுப்பு சபரீசனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. சபரீசனும் டெல்லி சென்றார். அங்கிருக்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசி பார்த்தார். ஒன்றும் பலனில்லை. கடைசியாகத்தான் கனிமொழி சென்று ராகுலிடம் பேசி இரு தரப்புக்கும் பொதுவான 10 சீட்டுகள் என்று முடிவுக்கு கொண்டு வந்தார்.
அணுகுமுறை
இதன்பிறகு பாமகவை உள்ளிழுக்க திமுக முயன்றது. இதில் ஆரம்பத்தில் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், துரைமுருகன் ஆர்வமாக இருந்தார். ஆனால் இது சம்பந்தமாக பேசி முடிக்க சபரீசனிடம்தான் பொறுப்பு தரப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் வேறு யாருமே கிடைக்கவில்லையா என்று ராமதாஸே கேட்டுவிட்டாராம். சபரீசனின் அணுகுமுறையால் பாமக திமுக கூட்டணிக்குள் வர முடியாமல் போய்விட்டது.
முழு பொறுப்பு
பாமகதான் கைநழுவி போய்விட்டதே, தேமுதிகவையாவது பிடித்து உள்ளே போடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அந்த பொறுப்பும் சபரீசனிடமே சென்றது. தேமுதிக கேட்ட தொகுதிகளோ 7, ஆனால் திமுக தர தயாராக இருந்ததோ 4. ராஜ்ய சபாவுக்கு நாங்கள் பொறுப்பு என்ற உத்திரவாதமும் தந்திருக்கிறது திமுக தரப்பு. ஆனால் தேமுதிக "நிறைய" விஷயங்களை எதிர்பார்க்க.. இதை திமுகவில் மூத்த சில தலைவர்களும் ஒப்புக்கொள்ள.. ஆனால் அதற்கு சபரீசன் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
டென்ஷன்
ஆக மொத்தம் பாமக, தேமுதிகவை திமுகவோடு சேர்க்க தரப்பட்ட அசைன்மென்ட்டுகளை சரியாக முடிக்காதது சபரீசனே காரணம் என்பதால்தான் டென்ஷனில் உள்ளார்களாம் திமுக மூத்த தலைவர்கள்! அது மட்டும் அல்ல, இப்படி பாமக, தேமுதிக இரண்டுமே வட மாவட்டங்களில் பலமான கட்சிகள். இரண்டில் ஒன்றைகூட உள்ளே சேர்த்து கொள்ளாத பட்சத்தில், வரும் தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக எப்படித்தான் ஜெயித்து வரப்போகிறதோ என்று இப்பவே கண்ணை கட்டுகிறதாம்!