புதிய அரசியல் கட்சி தொடங்கிய சபரிமாலா... பெண்கள் விடுதலைக் கட்சி என பெயர் சூட்டல்
சென்னை: பெண்கள் விடுதலைக் கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை தொடங்கியிருக்கிறார் ஆசிரியை சபரிமாலா.
முற்போக்குவாதியான இவர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது தனது அரசுப் பணியை உதறிவிட்டு முழுநேரமாக சமுதாயப் பணிகளில் ஈடுபடத்தொடங்கினார்.
இந்நிலையில் சமையலறையில் நிற்கும் பெண்களை சட்டமன்றத்திற்கு அனுப்புவேன் என்ற முழக்கத்துடன் பெண்கள் விடுதலைக் கட்சியை ஆரம்பித்துள்ளார்.
பூர்வீகம் மதுரை
மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எல்லையடி அரசு நடுநிலைப்பள்ளியிலும், திண்டிவனம் அருகே உள்ள வைரவபுரம் கிராம அரசு நடுநிலைப் பள்ளியிலும் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். தமிழ்மொழி பற்றாளரான இவர் பட்டிமன்றங்களிலும் பங்கேற்று தனது கருத்தை ஓங்கி உரைத்து வந்தார். முற்போக்குவாதியான இவர் இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
கடும் எதிர்ப்பு
அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பிறகு நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதில் கலந்துகொண்ட சபரிமாலா, தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்துவிட்டு சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் தனது கவனத்தை செலுத்தத் தொடங்கினார். இதனிடையே ஆசிரியையாக இல்லாவிட்டாலும் கூட தற்போதும் மாணவர்கள் மத்தியில் நல்ல கருத்துக்களை, பண்புகளை தனக்கு கிடைக்கும் பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட வாய்ப்புகள் மூலம் கொண்டு செல்கிறார்.
பெண்கள் விடுதலை கட்சி
இந்நிலையில் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியையோ, அமைப்பையோ சார்ந்து சபரிமாலா இயங்கியதில்லை. ஆனாலும் அவருக்கு முன்னணி இயக்கங்கள் பலவற்றில் இருந்து அழைப்பு வந்த வண்ணம் இருந்தன. எந்த கட்சியிலும் சேருவதை விட புதிதாக அரசியல் கட்சி தொடங்கினால் என்ன, என நினைத்த அவர், தற்போது பெண்கள் விடுதலை கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தோற்றுவித்துள்ளார். பெண்ணுரிமையை மையமாக வைத்து அவர் இந்த அமைப்பை தொடங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு
பெண்கள் என்றாலே குழந்தைகள் பெற்றுக்கொடுக்கும் இயந்திரங்களாகவும், சமையலறையில் பணியாற்றும் பொம்மைகளாகவும் இந்த சமுதாயத்தில் பலர் கருதுவதாகவும், அந்த எண்ணங்களை உடைத்தெறிந்து பெண்களும் உயரிய நிலையை எட்ட முடியும் என்பதற்கு தனது பெண்கள் விடுதலைக் கட்சி துணை நிற்கும் எனக் கூறியுள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் தமிழகத்திற்கு மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகியுள்ளது.