ஜாம்பவான் சச்சினை, கோலியுடன் ஒப்பிடுவதா? கிரிக்கெட்டுக்கு செய்யும் பச்சை துரோகம்!
சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது பரவலாக எழுந்துள்ள சர்ச்சை என்னவென்பது உங்களுக்கே நன்கு தெரியும். தலை சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரா அல்லது விராட் கோலியா என்பதுதான் அது.
விசாகப்பட்டினத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, தனது 205ஆவது இன்னிங்ஸில் கோலி 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.
சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்சுகளில், 10 ஆயிரம் ரன்களை கடந்திருந்த நிலையில், இதுவரை உலக அளவில் நீடித்த அந்த சாதனையை விராட் கோலி முந்தி சென்றுள்ளார்.
ஓப்பீடுகள்
இதன்பிறகுதான் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி நடுவேயான ஒப்பீடு என்பது அதிகரித்துள்ளது. புள்ளிவிவர அடிப்படையில் பார்த்தால் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் உள்ளிட்டவற்றில் சச்சினை விடவும் விராட் கோலி முன்னிலையில் இருப்பது தெரிகிறது. ஆனால், தரமான பேட்ஸ்மேன் என்பதை முடிவு செய்வதற்கு புள்ளிவிவரம் மட்டும் போதுமா?
இந்தியாவின் முதுகெலும்பு சச்சின்
இந்திய அணி எடுக்கும் ரன்களில் அதிகப்படியான பங்களிப்பை சச்சின் அளித்து வந்துள்ளார் என்கிறது புள்ளி விவரம். அதாவது இந்தியா300 ரன்கள் எடுத்தால் அதில் எப்படியும் மூன்றில் 1 பங்காவது சச்சினுக்குதான் இருக்கும். அதுபோன்ற ஒப்பீட்டை எடுத்து பார்த்தால் கோலியின் பங்களிப்பு என்பது குறைவாக உள்ளது. அதாவது சச்சின் அடித்தால்தான் இந்தியா ரன் குவிக்கும். சச்சின் அவுட் ஆனால் இந்தியாவும் அவுட் என்பது அதன் பொருள். மேலும், சராசரியாக 13.71 ஓவர்-ஆல் போட்டிகளுக்கு ஒரு சதம் அடித்துள்ளார் சச்சின். 19.67 ஓவர்-ஆல் போட்டிகளுக்கு ஒரு சதம் என்பது கோஹ்லி நிலை.
பல வீரர்கள்
இப்போதைய இந்திய அணியின் ரன் குவிப்பு என்பது மொத்தமாக அதிகரித்துள்ளது. இதனால் கோலி பேட் செய்யும்போது மறுமுனையில் அவருக்கு ஆதரவு கிடைக்கிறது. ஆனால் சச்சின் என்ற ஒருவரை நம்பித்தான் இந்திய அணி நீண்ட காலம் இருந்துள்ளது. மொத்த பாரத்தையும் அவர் தனது தோளில் சுமந்தபடியே இத்தனை ரன்கள் குவித்துள்ளார், என்பதுதான் இந்த புள்ளிவிவரம் சொல்லும் விஷயம்.
அதிவேக பந்து வீச்சாளர்கள்
சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிட முடியாது என்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம், அந்த காலகட்டத்தில் இருந்த பந்துவீச்சாளர்களின் திறமையும், மைதானத்தின் தன்மையும், இப்போது உள்ள பந்துவீச்சாளர்களின் தன்மையுடன் ஒப்பிட முடியாது என்பதுதான். மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளரை இப்போது சுட்டிக்காட்டி விட முடியுமா? 145 கி.மீ தாண்டும் பவுலர்களை கூட பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின், ஸ்டார்க் ஒருவரைத்தான் கை காட்ட முடியும். அவரும் அந்த வேகத்திற்கே அடிக்கடி காயத்தால் ஆப்சென்ட் ஆகிவிடுகிறார். ஆனால் சச்சினோ, பாகிஸ்தானின் சோயப் அக்தர், ஆஸ்திரேலியாவின் பிரட்லீ, நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் உள்ளிட்ட உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களை அநாயாசமாக சந்தித்து ரன் குவித்தார்.
எப்பேர் பட்ட பவுலர்கள்
பாகிஸ்தானின், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், இலங்கையின் சமிந்தா வாஸ், தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், மேற்கிந்திய தீவுகள் அணியின் அம்பரோஸ், வால்ஸ் போன்ற கிரிக்கெட் உலகம் கண்ட மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டது சச்சின் மட்டுமே. கோலி கிடையாது. வேகப்பந்து தான் என்று கிடையாது. கிரிக்கெட் வரலாற்றில் அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல்பந்து ஜாம்பவான்களை எதிர்கொண்டதும் சச்சின்தான். இலங்கையின், முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, பாகிஸ்தானின் சக்லைன் முஸ்தாக், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகிய சுழல் பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டார் சச்சின். அவர்களுக்கு அக்காலகட்டத்தில் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரே பேட்ஸ்மேனும் சச்சின் டெண்டுல்கர்தான். மொயின் அலி சுழலுக்கே தடுமாறும், கோலி, மேற்சொன்ன ஜாம்பவான் ஸ்பின்னர்களை சந்தித்து ரன் குவித்திருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
துரோகம் செய்யாதீர்கள்
ஒட்டுமொத்த அணியின் பாரத்தையும் தலையில் தூக்கி சுமந்ததோடு, கடினமான மைதானங்களில், மிகக் கடினமான பந்துவீச்சாளர்களை சந்தித்து இத்தனை ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரை, மைதானங்களில் எந்தவித அசைவும் இல்லாமல் வரும் பந்துகளையும், தரமான வேகப்பந்து அல்லது சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லாத 'பள்ளி கிரிக்கெட்' பந்து வீச்சாளர்களை, சந்திக்கும் இக்காலத்து விராட் கோலி போன்ற ஒரு வீரருடன் ஒப்பிடுவது, சச்சினுக்கு மட்டும் அல்ல, கிரிக்கெட்டுக்கே செ்யயும், மிகப் பெரிய துரோகம்.. பச்சை துரோகம்!
{document1}