வருத்தம்தான்.. கோபம்தான்.. ஆனால் யார் மேல தெரியுமா.. நயினார் அடித்த பலே பல்டி!
சென்னை: வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன். ஆனால் என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக பாஜகாவின் தமிழக துணைத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் அதிமுக அல்லது திமுக பக்கம் சாய இருக்கிறார் என்று செய்தி வெளியாகி வந்தது. நேற்று கூட செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்திருன்த பேட்டியில், எனக்கு மன வருத்தம் இருக்கிறது என்று பதிவு செய்து இருந்தார். மேலும் தனக்கு கொரோனா இருப்பதாகவும், அவரது சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் தன்னைத் தானே தனிமைபடுத்தி கொள்வதாகவும், கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்வதாகவும், வேலுண்டு வினையில்லை என்று பதிவு செய்து இருந்தார்.
பாஜக தலைவர் பதவி தனக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்ததாகவும், ஆனால், கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமானவர் கூறி வந்தனர். இந்த சூழலில்தான் அவரை திமுகவுக்கு அழைத்து வர பேசப்பட்டதாக செய்திகள் உலா வந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் திமுக மூத்த தலைவர் கே.என். நேருவை நயினார் நாகேந்திரன் சந்தித்ததாகவும் செய்தி வெளியாகி இருந்தது.
இந்த சூழலில் இன்று நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பதவில், ''வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன்!கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு !!
நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும் !! என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவில் மன வருத்தத்தில் உள்ளேன்... நம்பி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை -நயினார் நாகேந்திரன்