நிவர் புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் என்ன?
சென்னை: நிவர் புயலின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை மாநில வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் தமிழக கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. நிவர் புயலால் கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கிறது.
நிவர் புயலால் தமிழகம், புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயல் கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையரகம் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
நிவர் புயல்- அவசர உதவி எண்கள்: மாநில எண்: 1070; மாவட்ட எண்:1077- முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?
வீட்டில் இருப்பவர்களா?
நீங்கள் புயல் தாக்கும் போது வீட்டில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? முதலில் பதற்றப்படாமல் இருக்க வேண்டும்; அடுத்து வீட்டில் ஜன்னல், கதவுகளை நன்றாக மூடி வைக்க வேண்டும். ஏதேனும் அவசர உதவி எணில் குறிப்பிட்ட எண்களை அழைத்து கேட்கலாம்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்டவற்றின் அதிகாரப்பூர்வ பக்கங்களை நம்பி பின்பற்ற வேண்டும்; பேட்டரிகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தகவல்கள் பெற வானொலி, தொலைக்காட்சிகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
தயார் நிலையில் அவசர உதவி பெட்டகம்
மேலும் கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரி, உலர் உணவு வகைகள், குடிநீர், மருந்து பொருட்கள், குளுகோஸ் ஆகியவை கொண்ட அவசர உதவி பெட்டகத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருங்கள். புயல் மற்றும் பேரிடர் காலத்தில் உதவியாக இருக்கும்.
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; படகுகளை போதுமான இடைவெளியுடன் பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும்.