எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு.. ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.. கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: புதுச்சேரியில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி விழுப்புரம் புறவழி சாலையில் வில்லியனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் இன்று காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜூக்கு கொரோனா உறுதி.. அரசு மருத்துவமனையில் அனுமதி
கோவையில் பெரியார் சிலை
சமீபத்தில் கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாரத் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கோவை காவல் நிலையத்தில் சரணடைந்தார். சமூக அமைதியை சீர் குலைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரி எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
அதிமுக, பாஜக இடையே இருக்கும் கூட்டணியை கண்டிப்பதற்காக யாரேனும் இவ்வாறு செய்தார்களா என்ற கோணத்தில் புதுச்சேரி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான, ஓ.பன்னீர்செல்வம், டுவிட்டரில் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார். அதைப் பாருங்கள்:
காவித் துண்டு
தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இதயதெய்வம் புரட்சித்தலைவர் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சட்டப்படி நடவடிக்கை
தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசினை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.