மதுரை கிரானைட் ஊழலை வெளிப்படுத்திய சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளார். விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்துள்ள சகாயம் இன்னும் இரண்டு மாதங்களில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவர் பொறுப்பில் சகாயம் இருந்து வருகிறார். இன்னும் 3 ஆண்டுகள் பணிக்காலம் எஞ்சியுள்ள நிலையில் சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு கோரியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் மதுரை மாவட்டத்தில் ஆட்சியராக பணியாற்றிய போது பல ஆயிரம் கோடி கிரானைட் முறைகேட்டினை வெளிக்கொண்டு வந்தவர். இதன் காரணமாகவே பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
சொத்துக்கணக்கை வெளியிட்ட முதல் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். அரசு ஊழியர்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர்.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு இளைஞர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. சகாயம் ஐஏஎஸ் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவியது. நிலையில் தற்போது அரசியலுக்கு குறித்து அவர் கருத்து கூறியுள்ளார். அதில் ஊழலை எதிர்த்த அன்றே அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வந்துள்ளதை சமூகம் உறுதி செய்யும் என்று சொன்னார் சகாயம் ஐஏஎஸ்.
தமிழகம்.. ஊரடங்கில் மேலும் சலுகைகள்.. தியேட்டர்கள், பள்ளிகள் திறக்க அனுமதியா? இன்று அரசு அறிவிப்பு
ரஜினிக்கு ஆதரவு இல்லை
தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதாகக் கூறினார். ரஜினிகாந்துக்கு ஆதரவாக சகாயம் ஐஏஎஸ் களமிறங்கப்போவதாகவும் தகவல் வெளியானது. அதையும் மறுத்த அவர், ரஜினிக்கு ஆதரவு என்ற தகவலில் எந்தவித உண்மை இல்லை என்று கூறி அந்த கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நேர்மைக்கு மரியாதை
உலகில் நேர்மைதான் மிகவும் உயர்ந்ததென்று நினைக்கிறேன். நாட்டில் நேர்மை என்ற வார்த்தையைக் கேட்டாலே பலரும் பயப்படுகின்றனர். ஏதோவோர் அச்சமான சொல்லைப் போல் வியந்து பார்க்கின்றனர் என்று மாணவர்கள் மத்தியில் பேசியவர் சகாயம் ஐஏஎஸ். யாரும் நேர்மைக்கு வரவேற்பு இல்லை என்று ஒதுங்கிவிடாதீர்கள். கண்டிப்பாக நேர்மைக்கு மிகப்பெரும் மரியாதை கிடைக்கும். என்று கூறியவர் சகாயம் ஐஏஎஸ்.
ஐஏஎஸ் அதிகாரியின் பயணம்
தருமபுரி மாவட்ட பயிற்சி அதிகாரியாக பணியை தொடங்கிய சகாயம் ஐஏஎஸ், பல துணைகளில் பணிகளை செய்து நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்தவர். நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த போது சொத்துக்கணிப்பை வெளியிட்டவர். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த போது கிரானைட் ஊழல் முறைகேட்டினை வெளிப்படுத்தியர். இதனையடுத்து கோ ஆப் டெக்ஸ் நிர்வாக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் திறமையாக பணியாற்றி கைத்தறி துணிகள் விற்பனையில் சாதனை படைத்தார். வேட்டி தினம் கொண்டாட வைத்தவர் சகாயம் ஐஏஎஸ்.
விஆர்எஸ் கேட்ட சகாயம்
சயின்ஸ் சிட்டி எனப்படும் அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் பதவியில் இருக்கும் சகாயம் ஐஏஎஸ் இன்னும் மூன்று ஆண்டுகால பணிக்காலம் இருக்கும் முன்பே விஆர்எஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
புறக்கணிக்கப்பட்டாரா சகாயம்
கொரோனா பேரிடர் காலத்தில், மாவட்டங்களில் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். இந்தப் பணியில் சகாயத்தைப் புறக்கணித்தனர். ஆனாலும், தன்னார்வத்துடன் களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இரண்டு மாதத்தில் விடுவிப்பு
நேர்மையாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த அதிகாரி சகாயத்தை பல ஆண்டுகாலமாக புறக்கணித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. பல மாதங்களாகவே விருப்ப ஓய்பு மனநிலையில் இருந்த சகாயம் ஐஏஎஸ் தற்போது விஆர் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் இரண்டு மாதத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம்.