தமிழகத்தில் தூய அரசியல்வாதிகள் இல்லை.. இளைஞர்களே உஷார்.. நல்லவர் யார்னு பாருங்க.. சகாயம் பரபர பேட்டி
சென்னை: நல்லவர்கள் யார் என்பதை இளைஞர்கள் அடையாளம் தெரிந்து கொண்டு வரும் சட்டசபை தேர்தலில் தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி மேற்கொண்ட இளைஞர்களுக்கு சென்னையில் உள்ள மக்கள் பாதை அமைப்பின் அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சகாயம் பேசுகையில், மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.
தேர்தல் ஆணையம்
மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டங்கள் தொடர்பாக கொடுக்கின்ற வாக்குறுதிகளில் நம்பிக்கை இல்லாத காரணத்தினாலேயே விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தவறு இழைக்கின்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து புகார்கள் வருகின்ற போதே தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லவர்கள்
தமிழகத்தில் தூய்மையான அரசியல்வாதிகள் இல்லை. இளம் தலைமுறையினர்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். நல்லவர்கள் யார் என்பதை இளைஞர்கள் அடையாளம் கண்டு கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும் என சகாயம் பேசினார்.
மக்கள் பாதை அமைப்பு
சகாயம் மக்கள் பாதை அமைப்பு என்பதை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் உள்ள இளைஞர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். நேர்மையான அதிகாரிகளில் சகாயமும் ஒருவர். அதனால் வரும் தேர்தலில் சகாயத்தை முன்னிறுத்த வேண்டும் என்பது இளைஞர்கள் ஆசையாக உள்ளது.
சகாயம்
சகாயம் போன்றோர் அரசியலுக்கு வர வேண்டும் என கமல்ஹாசனும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். தற்போது விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் அண்மையில் பேசிய போது மக்கள் பாதை அமைப்பு வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்திருந்தார். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.