சகாயம் ஐஏஎஸ்ஸை முதல்வராக்க விருப்பமா?.. ஆன்லைனில் சர்வே நடத்தும் ஆதரவாளர்கள்
சென்னை: சகாயம் ஐஏஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்க தயாராக உள்ளீர்களா, அவர் முதல்வராக எந்த வழியிலாவது உதவ விரும்புகிறீர்களா என ஆன்லைனில் ஒரு சர்வே நடத்தப்படுகிறது.
நரபலி கொடுத்து சுடுகாட்டில் புதைக்கப்பட்டதை நிரூபிக்க மாலை நேரத்தில் பள்ளம் தோண்ட தொழிலாளர்கள் இல்லாத நிலையில் தடயங்கள் அழிக்கப்பட்டு விடும் என முன்கூட்டியே கருதிய சகாயம் ஐஏஎஸ் அன்று இரவு முழுவதும் சுடுகாட்டிலேயே கழித்த சம்பவங்களை மறக்க முடியுமா
கேட்கும் போது ஏதோ சினிமா போல் உள்ளபோதிலும் உண்மை, நியாயத்திற்காக சகாயம் செய்த "சகாயம்" எப்போதும் போற்றுதலுக்குரியதே.
ஆதரவாளர்கள்
அத்தகைய சகாயம் ஐஏஎஸ் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அவர் ஏற்கெனவே மக்கள் பாதை அமைப்பு என்பதை தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் அவரது ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நேர்மையான ஒருவர் முதல்வராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
ஆன்லைன்
அந்த வகையில் அண்மையில் எனது மக்கள் பாதை அமைப்பு விரைவில் வருங்காலத்தில் அரசியலில் இருக்கும் என சகாயம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சகாயத்தை முதல்வர் வேட்பாளராக களம் இறக்க அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் ஆன்லைன் மூலம் சர்வே எடுத்து வருகிறார்கள்.
விருப்பம்
wesupport-sagayamias-2021cm.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தன்னார்வலர்கள், சகாயத்திற்காக ஆதரவாளர்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். விரைவில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என சகாயத்தின் அறிவிப்புடன் காணொலி வருகிறது. அதில் சகாயம் ஐஏஎஸ்ஸை அரசியலுக்கு அழைத்து அவருடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலில் களம் காண விருப்பம் உள்ள ஒரு கோடி பேரை திரட்டி, சகாயத்திடம் நம் விருப்பத்தை கொண்டு செல்வோம்.
விஷயங்கள்
மாற்றம் எல்லாம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சகாயத்திற்கு ஆதரவு அளிப்பவர்களின் பெயர், வயது , ஆணா, பெண்ணா, செல்போன் எண், மாவட்டம், சட்டசபை தொகுதி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் இன்னொரு சில விஷயங்களும் கேட்கப்பட்டுள்ளன.
விருப்பங்கள்
அதாவது சகாயம் தலைமையில் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். ஆதரவாளராக இருக்க விரும்புகிறேன். நிதியுதவி அளிக்க விரும்புகிறேன் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டு அதில் ஒரு ஆப்ஷனை கிளிக் செய்ய கேட்டுள்ளார்கள். அது போல் ஏதாவது ஒரு நாளில் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்துவது குறித்து விருப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன.