சேலத்திலும் முறைகேடு? ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி.. ஸ்டாலின் சந்தேகம்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதையடுத்து இந்த சந்தேகம் எழுந்தது.
விசாரணைக்கு பின்னர் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை நீக்கிவிட்டு டிஎன்பிஎஸ்சி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இவர்களுக்கு அடுத்த வாரம் கலந்தாய்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழா.. இந்த குட்டி விஜபிக்கு மட்டுமே ஆத் ஆத்மி அழைப்பு!
40 பேர் வரை கைது
இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். புதிய புதிய தகவல்கள் வெளியாகி பூதகராமாகி வருகிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஓம் காந்தன், ஐயப்பன், சித்தாண்டி, ஜெயக்குமார் என சுமார் 40 பேரை இதுவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம்
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
முறைகேடுகள்
இது தொடர்பாக அவர் கூறுகையில், ``தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது குறித்த புகார்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சேலத்தில் என்ன
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமான புகாரை முதல்வரிடம் கொடுத்துள்ளதாகப் பேட்டி தந்துள்ளார்கள். அதற்கான விசாரணையை அரசு தொடங்கிவிட்டதா? தொடங்கவில்லை என்றால் உடனடியாகத் தொடங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு
டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப்-1, குரூப்-2A, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, தொடர்ந்து காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுத்து வரும் அனைத்துக் குற்றங்களையும் தொகுத்து அவற்றின் மீது, சிபிஐ விசாரணை நடத்த கால தாமதமின்றி உடனடியாக உத்தரவிடப்பட வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.