சனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்
Recommended Video
சென்னை: மார்கழி மாதத்தில் தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் உருவெடுக்கும் என சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் சனி பகவான் மகரத்தை தாண்டும் வரை தமிழகத்தில் மார்கழி மாதத்தில் அதிக போராட்டங்கள் நடைபெறும். அதாவது மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
எடப்பாடி பழனிச்சாமியின் ஜாதகம் நன்றாக உள்ளது. அவர் நல்லபடியாக அவரது பதவிக்காலத்தை முடித்துவிடுவார். இந்த ஆண்டுக்குள் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வரும். அதிலிருந்து ஒருவர் வெளியே வந்து இன்னொரு இயக்கம் தொடங்கி அதுவும் பலம் வாய்ந்ததாக வந்துவிடும். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா, தினகரன் ஆகிய 4 பேரில் மூன்று பேர் ஒன்று கூடுவர். ஒருவர் வெளியே வந்துவிடுவார்.
8 வழிச்சாலை திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் வரும்.. அடித்து சொல்லும் சேலம் பாலாஜி ஹாசன்
நல்ல வளர்ச்சி
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவர் இறந்ததை திங்கள்கிழமை அறிவித்தார்கள். ஆனால் எனது அனுமானப்படி அவர் ஞாயிற்றுக்கிழமை மதியமே உயிரிழந்திருக்கலாம். கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்கள் நல்ல வளர்ச்சி அடையும். யாரும் எதிர்பார்க்காத வகையில் காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் நல்ல வளர்ச்சியை பெறும்.
மேட்டூர் அணை
வேலூரில் இன்னும் 25 அல்லது 30 வருடங்களுக்குள் விமான நிலையம் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. மேட்டூர் அணை மீண்டும் நிரம்பாது. சென்னையில் 2015-இல் ஏற்பட்ட பெருவெள்ளம் போல் இந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ நடக்க வாய்ப்பில்லை. அதாவது 3 வருடங்களுக்கு சென்னையில் வெள்ளம் வராது. ஆனால் மழை வரும்.
வெள்ளம்
ஜூலை 20 முதல் 24-ஆம் தேதி வரை சென்னையில் நல்ல மழை இருக்கும். ஆகஸ்ட் 2, 3--ஆவது வாரத்தில் கேரளம், கர்நாடகத்தில் மக்களை பாதிக்காத வெள்ளம் ஏற்படும். ஜூலை கடைசி வாரத்தில் இடுக்கி, குடகு, வால்பாறை பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நல்ல மழையிருக்கும். ஆகஸ்ட் 2, 3-ஆவது வாரத்தில் இருந்து 22 நாட்களுக்கு மகாராஷ்டிரத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்படும்.
பாஜக
இந்தியாவிலேயே அதிக மழை பாதிப்பு என்றால் அது அஸ்ஸாமாக இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளில் திமுக 10 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜக தற்போது நன்றாகவே கால் ஊன்றி உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் அவர்கள் நல்ல இடத்திற்கு வருவர். தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வரும். தமிழிசைக்கு பதிலாக வேறு தலைவர் தேர்வு செய்யப்படுவர். அந்த வாய்ப்பு கோவையை சேர்ந்த ஒருவருக்கோ அல்லது தென்தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கோ கிடைக்கும்.
விஜய் அரசியல்
கமலுக்கு அரசியலில் இன்னும் 4, 5 ஆண்டுகளுக்கு பெரிய வளர்ச்சி இல்லை. பாமகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. விஜய் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் 2020, 2021-ஆம் ஆண்டுகளில் விஜய்க்கு திரைப்பட துறையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. கிரிக்கெட் வீரர் டோனி இந்த நவம்பர் இறுதிக்குள் ஓய்வை அறிவிப்பார். இல்லாவிட்டால் 20-20 போட்டிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளது. ஓய்வுக்கு பிறகு டோனி அரசியலுக்கு செல்வார். அவருடைய ஜாதகமும் அமித்ஷாவின் ஜாதகமும் நெருக்கமாக இருக்கிறது. எனவே அவர் பாஜகவில் இணைவார். ஓபிஎஸ் பாஜகவில் இணையமாட்டார் என்றார் பாலாஜி ஹாசன்.