மாநகராட்சியில் சேலம், நகராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் டாப்! குடியாத்தம், தென்காசிக்கும் விருதுகள்
சென்னை: தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட சேலம் மாநகராட்சிக்கு, இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 25 லட்சம் ரூபாய் மற்றும் விருது வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவுரவித்தார். சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் விருது வழங்கி முதல்வர் பாராட்டினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்தல், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தேர்வு செய்து முதலமைச்சர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்திலேயே சேலம் மாநகராட்சி மட்டும் தான் சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் 2-வது இடமும், தென்காசி 3-வது இடமும் பிடித்துள்ளது.
இந்நிலையில், 76- வது சுதந்திரம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். 2வது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடியை முதலமைச்சர் ஏற்றி, முதலமைச்சர் உரையாற்றினார்.
இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சேலம் மாநகராட்சிக்கு 25 ரூபாய் ரொக்கம் மற்றும் விருது வழங்கி கவுரவித்தார்.
இதேபோல், சிறந்த நகராட்சியாக முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாயும், 2-ம் இடம் பிடித்த குடியாத்தம் நகராட்சிக்கு 10 லட்சம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்த தென்காசி நகராட்சிக்கு 5 லட்சம் ரூபாயும் வாங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.
சிறந்த பேரூராட்சிக்கான விருதினை செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி பெற்றுள்ளது. கன்னியாகுமரி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. கருங்குழி பேரூராட்சிக்கு ரூ.10 லட்சமும், கன்னியாகுமரிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
விடுதலைக்கு முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடு! மகாத்மா காந்தியாக மாற்றியது மதுரை - முதல்வர் ஸ்டாலின்!