சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் சேலம் எம்.பி.க்கு பதவி...! புதிய சர்ச்சை
சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் சந்திரசேகரனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சேலத்தை சேர்ந்த அதிமுக ராஜ்யசபா எம்.பி. சந்திரசேகரன் சென்னை ஸ்மார்ட் சிட்டி குழுவில் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தை சேர்ந்த ஒருவரை சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் எப்படி நியமிக்கலாம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்... கொளத்தூர் மணி பாய்ச்சல்
ஆலோசனை குழு
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தை கேட்பதற்காகவும், மக்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காகவும் ஆலோசனைக் குழுவை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவில் இணைத்தலைவராக அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் டூ சென்னை
சேலத்தை சேர்ந்த ஒருவரை அதுவும் சென்னையின் நகர வரைபடம் கூட தெரியாத நபரை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுவின் இணைத்தலைவராக எப்படி நியமிக்கலாம் என இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னையில் வேறு ஆட்களே இல்லை என்று நினைத்து, சேலத்தில் இருந்து ஆள் அழைத்து வந்தார்களோ என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
நகரச் செயலாளர்
சேலம் மாவட்டம் மேட்டூர் நகர அதிமுக செயலாளராக உள்ள சந்திரசேகரன் கடந்த ஜூலை மாதம் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலோசனைக் குழு
சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய முக்கியமான இந்த திட்டத்தில் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையர் குமரவேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.