அம்மாவாக இருந்து உதவுங்கள் ப்ளீஸ்.. இளம்பெண் கோரிக்கை.. பொன்மகளுக்கு விரைவில் வேலை என முதல்வர் உறுதி
சென்னை: கொரோனா நிதிக்காகச் சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 பவுன் தங்க சங்கிலியை வழங்கியுள்ளார். அத்துடன் வேலையில்லாமல் தவிக்கும் தனக்கு அம்மாவாக இருந்து வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன் என்று முதல்வருக்கு அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது சேலத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார்.
அப்போது அவரிடம் பொதுமக்கள் பலரும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் சேலத்தைச் சேர்ந்த சௌமியா என்பவர் அளித்த மனு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சேலம் பெண்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இரா. சௌமியா. BE கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டதாரியான இவரது தந்தை ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடன் சேர்ந்து குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகள். ஆவின் நிறுவனத்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, அவரது தந்தை மூன்று பெண்களையும் படிக்க வைத்துள்ளார். மேலும், மூத்த சகோதரிகள் இருவருக்கும் திருமணமும் நடந்துவிட்டது.
வேலை இல்லை
குடும்பத்தில் உள்ள மூன்று பெண்களையும் பட்டதாரிகளாக்கினார் அவரது தந்தை. இருந்தாலும்கூட மூவருக்கும் வேலை கிடைக்கவில்லை. அவரது தந்தை பணி ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே தாயாருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தந்தை பணி ஓய்வின்போது கிடைத்த சேமிப்பு தொகை முழுவதையும் தாயாரின் சிகிச்சைக்காகச் செலவிட்டுள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் 12. 3. 2020 அன்று காலமானார்.
தந்தையின் ஓய்வூதியம்
தாயார் உயிரிழந்ததைத் தொடர்ந்து சௌமியா, அவரது தந்தையுடன் சொந்த கிராமத்திற்குச் சென்றுவிட்டனர். சொந்த வீடு இல்லை என்பதால் வாடகை வீட்டிலேயே தற்போது வரை உள்ளனர். தந்தை பணி ஓய்வு தொகையாகக் கிடைக்கும் 7000 ரூபாயில் வீட்டு வாடகைக்கே 3000 ரூபாய் செலவாவதால் குடும்பத்தை நடத்தி பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினிடம் சௌமியா கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
கோரிக்கை மனு
அதில் மிகவும் சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் தனக்கு அம்மாவாக இருந்து வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசு வேலை வேண்டும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஊரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் கூட போதும் என்றும் அவர் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
|
தாய் அன்பு
"இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாகத் தாய் அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருப்பேன்" என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னிடம் பணம் இல்லாததால் 2 பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிவாரண நிதிக்காக அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது தங்க சங்கிலியையும் கோரிக்கை மனுவில் இணைத்து வழங்கியுள்ளார்.
பொன்மகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை
சேலம் சௌமியாவின் கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று பதிவிட்டுள்ளார்,