ஷாக்.. அண்ணனை சவப்பெட்டியில் அடைத்து.. சாவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த தம்பி.. பாய்ந்தது வழக்கு!
சேலத்தில் அண்ணனை உயிருடன் சவப்பெட்டியில் வைத்த தம்பி மீது வழக்கு பாய்ந்தது
சென்னை: சவப்பெட்டியில் இருந்து உடம்பு அசையுது.. கைகளை கயிறால் கட்டி போட்டிருந்தாங்க.. 5 மணி நேரமாக பெட்டிக்குள்ளேயே உயிர் துடிச்சிட்டு இருந்தது" என்று உயிரோடு இருந்த அண்ணனை, சவப்பெட்டியில் வைத்த நிகழ்வு குறித்து சேலம் மக்கள் கொந்தளித்து பேசுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தம்பி சரவணன் மீது போலீசாரும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்.
Recommended Video
சேலம் மாவட்டம் சந்தபட்டியில் வசித்து வருபவர்தான் பாலசுப்ரமணிய குமார்... 78 வயதாகிறது.. இவரது தம்பி சரவணன். மூப்பு காரணமாக, பாலசுப்ரமணிய குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவும், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் பாலசுப்ரமணிய குமார் இறந்துவிட்டதாக சவப்பெட்டிக்கு சரவணன் ஆர்டர் தந்துள்ளார்.. அதனால், குளிர்சாதன பெட்டியை செய்து கொண்டு, பணியாளர்களும் நேற்று சரவணன் வீட்டிற்கு சென்று சென்றனர்.. கொஞ்ச நேரத்தில் வருவதாக சொல்லிவிட்டு போயுள்ளனர்.
சவப்பெட்டி
பிறகு பணியாளர்கள் திரும்பி வந்து பார்த்தபோதுதான், பெட்டிக்குள் பாலசுப்ரமணிய குமாரின் உடல் அசைந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. அதனால் உடனடியாக தங்களது ஓனருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும், அவரும் உடனடியாக அந்த வீட்டுக்கு வந்துள்ளார்.. இதை பற்றி கேட்டதற்கு, அவரது உயிர் இன்னும் போகவில்லை.
அண்ணன்
அதனால்தான் உயிர் பிரியும் வரை உடலை பெட்டிக்குள் வைத்துள்ளோம்... கொஞ்ச நேரத்தில் இறந்துவிடுவார் என்று கூலாக பதில் சொல்லி உள்ளனர். இதற்கு பிறகுதான் போலீஸாருக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. பாலசுப்ரமணிய குமார் மீட்டு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.
சரவணன்
நடந்த சம்பவம் பற்றி அந்த பகுதியில் சொல்லப்படுவதாவது: "பாலசுப்பிரமணிய குமார் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர்.. தம்பி சரவணனுக்கு 70 வயதாகிறது.. 2 மகள்கள் இருக்கிறார்கள்.. ஒருத்தர் பெயர் ஜெயா.. இன்னொருத்தர் பெயர் கீதா.. இதில், ஜெயாவுக்கு வாய் பேச முடியாது.. மற்றொரு பெண் கீதாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்திருக்கிறது.. அதனால் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை தந்துட்டு இருக்காங்க.
அதிர்ச்சி
இந்த சமயத்தில்தான் பாலசுப்பிரமணியத்துக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. திங்கட்கிழமையே சவப்பெட்டிக்கு சரவணன் ஆர்டர் தந்துட்டார்.. அதனால் அன்னைக்கே பெட்டியை வீட்டில் வைத்துவிட்டு, செவ்வாய்க்கிழமை வருவதாக பணியாளர்கள் சொல்லி விட்டு போனாங்க.. அதன்படியே செவ்வாய்கிழமை வீட்டுக்கு வந்தபோதுதான், சவப்பெட்டிக்குள் பாலசுப்பிரமணியம் உயிருடன் இருந்ததை பார்த்தனர்.. அவரது கைகளை கயிறால் இறுக்கி கட்டப்பட்டிருந்ததை பார்த்து அலறியேவிட்டனர்.
மிரட்டல்
இப்படி உடம்பு அசையறதை சரவணனும் பார்த்துட்டுதான் இருந்தார்.. "உங்க அண்ணனை இப்படி பாக்ஸில் படுக்க வெச்சிருக்கீங்களே, அது தப்பில்லையா? மனிதாபம் இல்லையா? என்று கேட்டிருக்காங்க.. அதுக்கு சரவணன்,"என்னய்யா சும்மா தேவையில்லாம கத்திட்டு இருக்கே" என்று ஊழியர்களையே மிரட்டி இருக்கிறார்.. அதற்குபிறகுதான் அவங்க ஓனருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும், அவர் விழுந்தடித்து கொண்டு இங்கே வந்தார். அவரும் சரவணனிடம் விசாரித்ததற்கு இப்படியேத்தான் அலட்சியமாக பதில் சொன்னார்.
சிகிச்சை
அதனால், அந்த ஓனர், தன்னுடைய வக்கீலுக்கு போன் செய்து தகவலை சொன்னார். "பயமா இருக்கு.. உடம்பு துடிச்சிட்டு இருக்கு.. நாங்க என்ன செய்யணும்? கயிறால் கைகளை கட்டிப்போட்டிருக்கே" என்று கேட்கவும், வக்கீலும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அதற்கு பிறகே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சையும் பாலசுப்பிரமணித்துக்கு தரப்பட்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் கை, கால் அசைக்க முடியாமல், பெட்டிக்குள்ளேயே அவரது உடல் துடித்து கொண்டிருந்தது.. வாய் பேச முடியாத ஜெயா, சவப்பெட்டியை சுற்றி சுற்றி வந்து கதறி அழுததை பார்க்கவே நெஞ்சம் பதறிவிட்டது" என்றனர்.
வழக்கு பதிவு
இந்நிலையில், உயிரோடு குளிர்சாதனப்பெட்டியில் வைத்த சரவணன் மீது சூரமங்கலம் போலீசில் புகார் தரப்பட்டது.. இந்த புகாரின்பேரில் போலீசார் உயிருக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடிய செயலை செய்வது மற்றும் அஜாக்கிரதையாக கையாளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் மக்களுக்கு மட்டுமில்லாமல், தமிழக மக்களையே உறைய வைத்து வருகிறது.