ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 30 வரை தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.. அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாட்டில் மக்கள் தொகைக்கான கணக்கெடுப்பு பணிகள் 1872-ம் ஆண்டு துவக்கப்பட்டு 1881-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் 2011-ல்தான் முதன்முறையாக உயிரியளவு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
கடந்த முறைநடைபெற்ற 15-வது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, வீட்டைப் பட்டியலிடுதல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதற்கட்டமான வீட்டைப் பட்டியலிடுதலில், அனைத்துக் கட்டிடங்களைப் பற்றிய தகவல்கள் சேகரிப்பு 2010 ஏப்ரல் 1 தொடங்கியது.
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கான தகவல்களும் இந்த முதற்கட்டப் பணியின்போது சேகரிக்கப்பட்டன. பதியப்பட்ட அனைத்து இந்தியர்களுக்கும், இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தால் ஒரு 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் வெளியிடுவதற்கு இந்தப் பதிவேட்டிற்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.
இரண்டாம் கட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 2011 பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி 2021-ம் ஆண்டு துவங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி தமிழகத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சிவகங்கை, நீலகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள வட்டாரங்கள் மாதிரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாட்டின் உத்தேச மக்கள் தொகை 121 கோடியே 2 லட்சமாக இருந்தது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் தமிழகம் 7-வது இடத்தில் இருந்தது.
2011-ல் தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.