ஸ்ட்ரைக் உறுதி.. கட்டுமான தொழில் முடங்கும்.. எச்சரிக்கும் தமிழக மணல் லாரி உரிமையாளர் சங்கம்
சென்னை: தமிழகத்தின் மணல் கொள்கையை எதிர்த்து மார்ச் 19 முதல் கட்டுமான தொழில் முடங்கும் வகையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:
மலேசிய மணல் ஒரு யூனிட்டுக்கு 10 ஆயிரத்து 350 ரூபாய் அதிக விலை விற்பதைவிட, இலவசமாகவும் குறைந்த விலையிலும் மணல் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுமான பணிக்கான மணல் விநியோகம் கடந்த நான்கு மாதங்களாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலமாக 6 மாதத்திற்கு முன்பு பணம் செலுத்தியும் இன்று வரை மணல் வழங்கப்படவில்லை.
50 கோடிகள் மதிப்பு வரை அனுமதி அளிக்கப்படும் இன்றுவரை குவாரிகள் திறக்கப்படவில்லை. இதுதொடர்பாக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.
முதல்வர் உடனடியாக கோரிக்கைகளை பரிசீலனை செய்யாவிட்டால் அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் கட்டுமான தொழில் முடங்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு யுவராஜ் தெரிவித்தார்.