மணல் கொள்ளையை தடுக்க ஏசி அறையில் ஆலோசிப்பதால் பலனில்லை.. உயர்நீதிமன்றம் அதிருப்தி
சென்னை: மணல் கொள்ளையை தடுக்க ஆற்றங்கரைகளில் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி கண்காணிக்கும் முறையை, விரைந்து தொடங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணல் கொள்ளையைத் தடுக்க மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 783 வாகனங்கள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியவரை தீவிரமாக தேடும் போலீஸ்
ஆனால் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் போதுமான விவரங்கள் இல்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மணல் கடத்தலை தடுக்க முடியாத நிலைக்கு ஒருசில அதிகாரிகளே காரணம் எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மணல் கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆற்றங்கரைகளிலும், ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு துரிதகதியில் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் உள்ள உயரதிகாரிகளை இணைக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்
மாவட்ட, தாலுகா குழுக்கள், ஏசி அறையில் ஆலோசிப்பதால் எந்தப் பயனும் இல்லை எனவும், களத்துக்குச் சென்று கடத்தலை தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும் மணல் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கடமை தவறினால் அவர்களை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.