தலை எங்கேய்யா இருக்கு... சந்தியாவை ஹாயாக கொன்று விட்டு போலீசை திணறடிக்கும் பாலகிருஷ்ணன்
சந்தியாவின் தலையை சென்னை போலீசார் இன்று 3-வது நாளாக தேடி வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: சந்தியாவின் உடல் பாகங்களை மட்டும் வைத்து கொண்டு தலையை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
51 வயதான பாலகிருஷ்ணன், 35 வயதான சந்தியாவை கல்யாணம் செய்து, நடத்தையில் சந்தேகம் காரணமாக தலையில் சுத்தியால் அடித்து கொன்று விட்டார். பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி, 4 பார்சல்களாக கட்டி குப்பை தொட்டியில் வீசியுள்ளார். அதில் ஒரு கை மற்றும் 2 கால்கள் அடங்கிய பார்சல் ஒன்று பெருங்குடி குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது.
பெரிய சவாலான இந்த கொலையை சென்னை போலீசார் சாதுர்யமாக துப்பு துலக்கி கொலையாளியையும் கைது செய்து விட்டார்கள். ஜாபர்கான்பேட்டை பாலத்தில் வீசிவிட்டேன் என்று பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி, சந்தியாவின் இடுப்பில் இருந்து தொடை வரையிலான பகுதியை போலீசார் அழுகிய நிலையில் கைப்பற்றினர். இன்னும் சந்தியாவின் தலை, இடது கை உள்ளிட்டவை கிடைக்கவில்லை.
எங்கே வீசினார்?
ஆனால் தலையை எங்கே பாலகிருஷ்ணன் வீசினார் என்று உறுதியாக தெரியவில்லை. அவர் சொன்னதுபோலவே பாலத்தில் போட்டிருந்தால் எங்காவது அடித்து செல்லப்பட்டிருக்குமா? அல்லது வேறு எங்கேயாவது தலையை போட்டுவிட்டு போலீசாரை பாலகிருஷ்ணன் குழப்பியும், திணறடித்தும் வருகிறாரா என தெரியவில்லை.
நிரூபிக்க முடியுமா?
இதனால் சென்னை போலீசார் சந்தியாவின் தலையை 3 நாட்களாக தேடி வருகிறார்கள். இந்த நிலையில் தலை கிடைக்காவிட்டால் இந்த வழக்கின் விசாரணை என்னவாகும்? வெறும் உடல் பாகங்களை வைத்து கொண்டு சந்தியாதான் இறந்தது என்று சொல்ல முடியுமா? தலையே கிடைக்காவிட்டால் இறந்தது யார் என்பதை போலீசார் எப்படி நிரூபிக்க முடியும்? என்ற கேள்விகள் எழுந்தன. இது குறித்து காவல்துறை, மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் சென்று விசாரித்தோம். அப்போது அவர்கள் சொன்ன விஷயம் இவைதான்:
துல்லியமான டெஸ்ட்
"முதலாவதாக, கிடைத்துள்ள உடல் பாகங்களை வைத்து டிஎன்ஏ சோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட்டில் இருந்து எதுவுமே தப்ப முடியாது. உடல் பாகங்களில் டெஸ்ட் எடுத்துவிட்டு, சந்தியாவின் அம்மா, அப்பா, சகோதரிகள், குழந்தைகளிடமும் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் இது நிரூபணமாக வாய்ப்புள்ளது.
கைரேகை
இரண்டாவதாக, மீதம் பாகங்கள் கிடைக்காவிட்டாலும், மீட்கப்பட்டுள்ள அந்த ஒத்த கையில் உள்ள கைரேகை எடுத்து, அதன்மூலம் ஆதார், பாஸ்போர்ட் போன்றவற்றுடன் ஒப்பிட்டு பார்த்தும் இறந்தது சந்தியாதான் என்பதை சொல்லலாம். மூன்றாவதாக, கிடைத்துள்ள உடல் பாகங்களை வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்தாலும் விஷயம் ஓரளவு தெளிவாகும்.
போலீஸ்-கோர்ட்
எப்படி பார்த்தாலும் கிட்டத்தட்ட நிறைய உடல்பாகங்கள் கிடைத்துவிட்ட நிலையில், வெறும் தலை மட்டும் கிடைக்கவில்லை என்பதற்காக இது பெரிய சிக்கலாக போலீசுக்கும், கோர்ட்டுக்கும் இருக்காது. வெறும் தலை எங்கேயும் உயிருடன் நடமாடவும் முடியாது. அதனால் இந்த வழக்கை நாங்கள் எளிதாக முடித்துவிடுவோம்" என்கின்றனர் நம்பிக்கையாக.
குழப்பும் பாலகிருஷ்ணன்
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் சென்னை போலீசார் சந்தியாவின் தலையை 3-வது நாளாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். சிரித்த மேனிக்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பாலகிருஷ்ணனோ, நான்தான் கொன்றேன் என்கிறார், திடீரென நான் கொல்லவில்லை என்கிறார்.
குப்பையில் தலை?
அதனால் தலையை எங்கே தூக்கி போட்டார் என தெரியாமல் போலீசார் தேடி வருகிறார்கள். சென்னையில் ஒரு நாளைக்கு பல்லாயிரம் டன் குப்பைகள் கொட்டப்படும் நிலையில், இந்த தலை எங்கே சிக்கி கொண்டிருக்குமோ என்று தெரியாதது இன்னும் புதிராகவும், மர்மமாகவுமே இருக்கிறது.