16 வயது மூத்தவருடன் திருமணம்.. மகளாவது நல்லா வாழட்டும்.. இதுதான் சந்தியா பெற்றோர் செய்த தவறு!
Recommended Video
சென்னை: ஏழ்மை நிலையில் உள்ளதால் மகளாவது நன்றாக இருக்கட்டும் என நினைத்த சந்தியாவின் பெற்றோர் டைரக்டர் பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்துவைத்து தற்போது அவரை பாழும் கிணற்றில் தள்ளியதை எண்ணி மனம் நொந்து கொள்கிறார்கள்.
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). இவரது மனைவி சந்தியா. பாலகிருஷ்ணன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். காதல் இலவசம் என்ற படத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து பெரும் நஷ்டமடைந்தவர். இந்த நிலையில் சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஏற்கெனவே சந்தியா மீது சந்தேகம் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் அவரது ஆசையால் கோபமடைந்துள்ளார். பின்னர் சந்தியாவிடம் பேசி நடிக்கும் ஆசையை விட்டு விடுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரோ அதற்கு மறுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்தது.
சினிமா வாய்ப்பு
இதனால் சந்தியா விவாகரத்துக்கு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து சினிமா வாய்ப்பு தேடி சென்னையில் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். அங்கிருந்தபடியே ஆண் நண்பர்களிடம் சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.
உடலை கூறு போட்ட பாலகிருஷ்ணன்
இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி சந்தியாவுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக தனது வீட்டுக்கு அழைத்து சந்தியாவை கொன்று அவரது உடலை கூறு போட்டு ஆங்காங்கே வீசியுள்ளார் பாலகிருஷ்ணன்.
குடும்பத்துடன்
இதுகுறித்து சந்தியாவின் உறவினர்கள் கூறுகையில் சந்தியாவுக்கு உதயன் என்ற அண்ணனும், சஜிதா என்ற தங்கையும் உள்ளனர். அண்ணன் கேரளத்தில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சஜிதா திருமணம் ஆகி தென்தாமரைகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
16 வயது வித்தியாசம்
சந்தியா வறுமை காரணமாக 7-ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டார். இந்த நிலையில் சினிமா உதவி இயக்குநருக்கு திருமணம் செய்ய ஒரு பெண் தரகர் இவரது பெற்றோரை அணுகினர். 16 வயது வித்தியாசம் இருந்தாலும் நாம் தாம் கஷ்டப்படுகிறோம். நமது மகளாவது நன்றாக இருக்கட்டுமே என நினைத்து பாலகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் சகஜமாக பழகக் கூடிய ஒரு பெண்ணை இப்படி சந்தேக பார்வையில் பார்த்து அவரை கொன்று விட்டாரே என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.