மோடி பேச்சுக்கு இதுவா மரியாதை..? ஐஐடி நிர்வாகத்தின் செயலால் அதிர்ச்சியில் பாஜகவினர்
Recommended Video
சென்னை: சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆனால் இது மோடி பங்கேற்றது பற்றிய செய்தியல்ல. ஐஐடி நிர்வாகம் மோடியின் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒளிபரப்பிய ஒரு கடவுள் வாழ்த்துதான் இப்போது அதிக கவனம் ஈர்த்துள்ளது.
சமஸ்கிருத பாடலுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. ஆங்கிலத்திலும் அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்ல சொல்ல, மாணவ, மாணவிகளும் சமஸ்கிருத ஸ்லோகத்தை திருப்பி சொல்லியுள்ளனர்.
அரசு நிறுவனமான, ஐஐடியில், சமஸ்கிருதத்தில் வாழ்த்துபாடல் வழங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்ற கேள்வி எழலாம். ஆனால் செய்தி அதுபற்றியும் இல்லை.
தொன்மையான தமிழ் மொழி
இப்போது விஷயத்துக்கு, வருவோம். ஐஐடி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவதற்கு, சென்னை வந்திறங்கிய நரேந்திர மோடி, விமான நிலையத்திலேயே பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, அவர் அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று தெரிவித்தேன். அங்குள்ள ஊடகங்களில் அது முக்கிய செய்தியாக மாறியுள்ளது, என்று தெரிவித்தார்.
இட்லி, தோசை, வடை
இதுமட்டுமா? தமிழர்களின் விருந்தோம்பல் மிகவும் சிறப்பானது. அவர்களின் இட்லி, தோசை, வடை போன்ற உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று மோடி தெரிவித்திருந்தார். இதுதான் விஷயம். அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தொடர்ந்து தமிழை உயர்த்திப் பிடிக்கக் கூடிய மோடி, பங்கேற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத பாடல் ஒலித்தது சரியா? என்ற ஆதங்கம் மோடி ஆதரவாளர்களுக்கு எழுந்துள்ளது.
அமெரிக்காவே பேசுகிறது, ஐஐடிக்கு தெரியவில்லை
மோடியே சொன்னதை போல, அமெரிக்க ஊடகங்கள், மோடியின் தமிழ்ப்பற்றை பார்த்து பூரித்துப் போய் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் உள்ள ஐஐடி, அதுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கல்வி நிறுவனம், மோடியின் இந்த தமிழ் மொழி பற்று குறித்து, கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் சம்பந்தமே இல்லாமல் சமஸ்கிருதத்தில் மாணவர்களை, பாட வைத்தது சரியா என்று கேட்கின்றனர் சில பாஜகவினர்.
சுதாரித்திருக்க வேண்டாமா
அமெரிக்கா மட்டுமின்றி.. அப்போது கொஞ்ச நேரம் முன்புதான் ஏர்போர்ட்டில் கூட தமிழ் பற்றி அவ்வளவு பெருமையாக பேசி இருந்தார் மோடி. அதற்குப் பிறகாவது சுதாரித்துக்கொண்டு தமிழ்மொழியில் வாழ்த்துப் பாடலை, ஐஐடி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? இது மோடி நிலைப்பாட்டிற்கு எதிரானது போல அல்லவா மாறி விட்டது? என்று அவரது ஆதரவாளர்கள் அங்கலாய்க்கிறார்கள்.
|
சென்னையில் இப்படியா
ஐஐடியின் இந்த செயல் மோடிக்கு மரியாதை தருவதாக அமையவில்லை. தமிழை உயர்த்தி பேசி வரும் மோடி, ஐஐடியில் சமஸ்கிருத மொழியில் பாடியதை கண்டிப்பாக ரசித்திருக்க வாய்ப்பு இல்லை. இனியாவது, ஐஐடி நிர்வாகம், நிகழ்ச்சியில் பங்கேற்பவர் யார், எந்த மாநிலத்தில் நாம் செயல்படுகிறோம் என்பதை ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், தமிழ் ஆர்வலர்கள்.