ஏன் சரத்குமார் இப்படி சொல்றாரு.. "அணி" உருவாகிறதாம்.. ஆனால் 3வது அணி கிடையாதாம்.. குழம்பும் கட்சிகள்
சரத்குமார் அதிமுக கூட்டணி குறித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: "எங்களுடைய வாக்கு சதவீதம் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது.. இதற்கு காரணம் அதிமுகதான்" என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி அருகே உள்ள திரவியபுரத்தில் இன்று நடக்கிறது...
இதில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சரத்குமார் வந்தார். அப்போது, ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் அவர் சொன்னதாவது:
ராதிகா இந்த தொகுதில களமிறங்கி வெற்றியை விதைக்க போறாராமே... இதுக்கு சரத்குமார் சொன்ன பதிலை பாருங்க!
10 வருஷம்
அதிமுகவோடு 10 வருஷம் கூட்டணி வைத்திருந்தோம்... இதனால் எந்த தேர்தலையும் முழுமையாக சந்திக்க முடியாமல் போய்விட்டது... எங்களுடைய வாக்கு சதவீதம் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது. நாங்கள் உருவாக்கும் பிரதான அணி வெற்றி பெறலாம்... நாங்கள் அமைக்கும் பிரதான அணி கூட ஆட்சி அமைக்கும் நிலையும் வரலாம்..
விஜயகாந்த்
ஆனால், நாங்கள் அமைப்பது மூன்றாவது அணி கிடையாது.. அது பிரதான அணி... இப்போதைய நிலையில் விஜயகாந்த் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்த சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்... ராதிகா உள்பட கட்சி நிர்வாகிகள் யார், யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
அதிமுக
ஒன்று, இரண்டு தொகுதிகள் தந்தால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம், தகுதி பார்த்து எங்களுக்கு சீட் தந்தால் அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என்று ஏற்கனவே சரத்குமார் பலமுறை சொல்லி வந்துள்ளார்.. ஆனால், இதற்கு எந்தவித பதிலையும் அதிமுக சொல்லவில்லை.. இதற்கு பிறகுதான் சசிகலாவை சென்று சந்தித்து, அதிமுகவுக்கு ஒரு ஷாக் தந்திருந்தார் சரத்குமார். எனவே அவர் அமமுக பக்கம் அணி வகுத்து நிற்க போகிறாரா? அல்லது அதிமுகவிடமே கறார் காட்டி சீட் வாங்க போகிறாரா என்பது தெரியவில்லை.
அணி
ஆனால், அணி ஒன்றினை உருவாக்குவதாகவும், அந்த பிரதான அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் சரத்குமார் சொல்கிறார்.. அப்படி என்றால், அந்த அணி யாருடையது? யார் தலைமையில் அமைய போகிறது? அது 3வது அணி கிடையாது என்றும் சொல்கிறாரே? என்ற குழப்பங்களும் எழுகின்றன.. ஒருவேளை அந்த 2 கட்சிகளும் இணைய போகிறதா? அதுவும் தெரியவில்லை.. பார்ப்போம்.