அரிவாளை தூக்கி காட்டிய விஜய் ரசிகர்கள்.. வளைத்து பிடித்தது சென்னை போலீஸ்
மிரட்டல் விடுத்த 2 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: "உங்க உசுரு எங்க கையிலதான்.. இனி எங்க அருவாதான் பேசும்"என்று அதிமுகவினருக்கு மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'சர்கார்' சமீபத்தில் வெளிவந்தது. காப்பி ரைட் பிரச்சனையால் சர்ச்சையாகி.. பிறகு மெல்ல ஓய்ந்து படம் வெளியானது. ஆனால் படம் வந்ததும் அடுத்த சர்ச்சை அதிமுகவினரால் எழுப்பப்பட்டது.
மாநில அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரையும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. எனவே அத்தகைய காட்சிகளை எல்லாம் நீக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்களே பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தனர்.
தீயிட்டு கொளுத்தினர்
இதைதவிர, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தினர். அந்த போராட்டத்தில்தான், தியேட்டர்கள் முன் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள் எல்லாம், அரசு தந்த இலவச பொருட்களை எல்லாம் நெருப்பில் இட்டு கொளுத்த ஆரம்பித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில், 2 விஜய் ரசிகர்கள் கையில் அரிவாளை வைத்துகொண்டு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மற்ற விஜய் ரசிகர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்குமே அதிர்ச்சியை ஏற்டுத்தியது.
2 விஜய் ரசிகர்கள்
பேனர் கிழித்த அதிமுகவினரை அரிவாளால் வெட்டுவோம் என்பது உட்பட வன்முறை கொப்பளிக்கும் வகையிலும், ஆபாசத்தை அள்ளி தெளிக்கும் வகையிலும் அந்த 2 இளைஞர்கள் வீடியோவில் பேசியிருந்தனர்.
விசாரணை ஆரம்பம்
இதையடுத்து, அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்த அந்த 2 பேரையும் கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டியது. வீடியோவில் பேசிய அந்த நபர்கள் யார் என தன் விசாரணையை தீவிரப்படுத்த தொடங்கியது.
அதிரடி கைது
இந்த நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 23452348, 23452350 என்ற எண்களில் மக்கள் தகவல் சொல்லலாம் என்றும் தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டது. இப்படி பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்ட காவல்துறை தற்போது வீடியோவில் பேசிய ஒருவரையும், அந்த வீடியோ எடுத்த நபரையும் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சஞ்சய், லிங்கதுரை
மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரிவாளுடன் மிரட்டி பேசியவர்கள் பெயர்கள் சஞ்சய் மற்றும் லிங்கதுரை என்பதும், எண்ணூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவை எடுத்தவர் வடபழனியை சேர்ந்த அனிஷேக் என்பதும் கூறப்படுகிறது.
அரிவாள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட சஞ்சய் மற்றும் அனிஷேக்கிடம் செல்போன் உட்பட கையில் வைத்து மிரட்டிய அரிவாள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இன்னமும்கூட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.