இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய நவ.27ம் தேதிவரை தடை.. ஹைகோர்ட் அதிரடி!
Recommended Video
சென்னை: சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை, நவம்பர் 27ம் தேதிவரை, கைது செய்ய சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசுக்கு எதிராக இருப்பதாக கூறி அக்கட்சியினர் மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பல இடங்களில் தியேட்டர்களில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டன.
[சர்கார் விவகாரம்.. முதல்வரை சந்திக்க விஜய் முடிவு? அமைச்சர் பதில்]
இயக்குநர் மீது புகார்
படத்தின் இயக்குநர் முருகதாசுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம், தேவராஜன் என்பவர் நேற்று புகார் அளித்தார். அரசின் விலையில்லா திட்டத்தில் வழங்கப்பட்ட பொருட்களை தீயில் போடுவதை போல படத்தில் காட்சிகளை வைத்துள்ள முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்ய அதில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவில், முருகதாஸ் இல்லத்திற்கு போலீசார் சென்று அவரை தேடியுள்ளனர்.
முன் ஜாமீன்
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் தரப்பில் இன்று முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சர்கார் திரைப்படத்திற்கு எதிராக, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காவல் ஆணையரிடம் தேச துரோக வழக்கில் என்னை கைது செய்ய, புகார் தந்துள்ளனர். என்னை கைது செய்ய கூடும் என்ற அச்சம் இருப்பதால் முன்ஜாமீன் தேவை. இதை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
காரசாரம்
இதையடுத்து, இதை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி இளந்திரயன் உத்தரவிட்டார். மனு தாக்கல் செய்யப்பட்டதும், இன்று மதியம் 2.45 மணியளவில், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி இளந்திரயன் முன்னிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் பிரபாவதியும், முருகதாஸ் தரப்பு வழக்கறிஞர் விவேகானந்தனும் காரசார விவாதம் முன் வைத்தனர்.
கைது செய்ய தடை
ஜெயலலிதாவின் இயற்பெயரை சர்கார் படத்தில் பயன்படுத்தியுள்ளனர், இலவச பொருட்களை தீயிட்டுள்ளனர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். ஆனால் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்று, விவேகானந்தன் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளந்திரயன், வரும் 27ம் தேதிவரை, முருகதாசை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார். எனவே காவல்துறை கெடுபிடியிலிருந்து முருகதாஸ் தப்பியுள்ளார்.