சர்கார் விவகாரம்.. முதல்வரை சந்திக்க விஜய் முடிவு? அமைச்சர் பதில்
Recommended Video
சென்னை: சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க, நடிகர் விஜய் நேரம் கேட்டிருந்தாரா என்பது குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தெரிவித்தார்.
சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் தொடர்பாக அதிமுகவினர் தமிழகம் முழுக்க அந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் முன்பாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தியேட்டர்களை முற்றுகையிட்டும், பேனர்களை கிழித்ததன் காரணமாகவும் பல இடங்களில் சர்கார் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.
[கமலுடன் கை கோர்க்கிறார் விஜய்? தமிழக அரசியலில் காத்திருக்கும் புயல்! ]
போராட்டங்கள்
மதுரை, கோவை, திருச்சி, சேலம் என்று பல நகரங்களிலும் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. இதனால், திரைப்படத்தின், வருவாய் பாதிக்கும் சூழ்நிலை எழுந்துள்ளதால், நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு கோரிக்கை விடுக்க உள்ளதாக இன்று காலை முதல் சில தகவல்கள் பரவி வந்தன.
பிரச்சினை ஓவர்
இந்த நிலையில் முதல்வரை, சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்த அவர், சர்கார் பிரச்சனை முடிவடைந்துவிட்டதாகவும், மறு தணிக்கை செய்யப்பட்டதால், அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
விஜய் நேரம் கேட்கவில்லை
அப்போது அவரிடம், நடிகர் விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க நேரம் கேட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க, விஜய் நேரம் கேட்கவில்லை என்று தெரிவித்தார். இதனால் அந்த யூகங்கள் முடிவுக்கு வந்தன.
ஜெயலலிதா மறுப்பு
'தலைவா' திரைப்படத்தின்போது அதை வெளியிட முடியாத அளவுக்கு பிரச்சனைகள் இருந்தபோது அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சந்திப்பதற்காக கோடநாடு எஸ்டேட்டுக்கு, விஜய் சென்றிருந்தார். ஆனால் அவரை சந்திக்க ஜெயலலிதா மறுத்தது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது . இருப்பினும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் Time to lead என்ற வரியை தலைப்பிலிருந்து நீக்கியதன் மூலமாகவும், திரைப்படம் வெளியிட அனுமதி கிடைத்தது.
எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு
கடந்த ஆண்டு வெளியான. 'மெர்சல்' திரைப்படத்தின் போது பிரச்சினை வெடித்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு தகவல் உண்டு. இந்த நிலையில், சர்கார் திரைப்பட விவகாரம் தொடர்பாக, முதல்வரை சந்திக்க விஜய் நேரம் கேட்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.