40 நாள் பிளான்.. ஃபோனால் மாட்டிய பரிதாபம்.. விஜய் ரசிகர்களை போலீஸ் பிடித்தது எப்படி?
அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்களை போலீஸ் எப்படி பிடித்தது என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்களை போலீஸ் எப்படி பிடித்தது என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியாகி வெற்றி அடைந்தது. இந்த படத்தில் அதிமுகவிற்கு எதிராக சில வசனங்களும் காட்சிகளும் இருந்தது. இதனால் விஜய் ரசிகர்களுக்கும், அதிமுகவினரும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
அதன்பின் சர்கார் படத்தில் இருக்கும் சில மோசமான காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட்டது.
வீடியோ வெளியிட்டார்
இதையடுத்து, விஜய் ரசிகர்கள் இருவர், அதிமுகவினருக்கும், ஆளுங்கட்சிக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில் நாங்கள் நினைத்தால் கொலை கூட செய்வோம் என்பது போல மிரட்டல் விடுத்து இருந்தனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் போலீஸ் அவர்களை இப்போதுதான் கைது செய்துள்ளது. அவர்கள் சிக்கிய கதையே மிகவும் சுவாரசியமானது.
ஜாமீன்
முதலில் போலீஸ் இவர்களை யார் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில்தான் அந்த வீடியோவில் இருக்கும் நபர்களின் ஒருவரான ஆவடியை சேர்ந்தவர் லிங்கத்துரை, இந்த வழக்கில் கைதாக கூடாது என்பதால் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். எந்த க்ளூவும் கிடைக்காமல் இருந்த போலீஸ் இந்த முன்ஜாமீன் தாக்கல் செய்த விவரத்தை வைத்து லிங்கத்துரையின் போன் நம்பரை கண்டுபிடித்தது.
நண்பர்கள் மாட்டினார்கள்
இந்த போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீசின் உதவியுடன், லிங்கத்துரையின் கால் ஹிஸ்டரி எடுக்கப்பட்டு இருக்கிறது. அதை வைத்து அவர் எங்கே வேலை பார்த்தார் என்று கண்டுபிடித்து அங்கே சென்று விசாரித்து இருக்கிறார்கள். அதோடு அவர் வசிக்கும் தெருவிலும் சென்று விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இதில் அந்த வீடியோவில் இருந் இன்னொரு நபரும், வீடியோவை எடுத்த நபரும் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
மூவரையும் கைது
அங்கு திரட்டிய தகவல்களை வைத்து வீடியோவில் இருந்த இன்னொரு சிறுவனையும் (17 வயது) , அனிஷேக் என்று வீடியோ எடுத்த இளைஞனையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, கடைசியாக லிங்கத்துரையும் கைது செய்யப்பட்டார். லிங்கத்துரை ஜாமீன் மனுவில் போலியான விலாசம் கொடுத்த காரணத்தால் அவரது முன்ஜாமீன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
மாஸ்டர் வேலை
இவர்களை பிடிக்க தமிழக போலீஸ் கிட்டத்தட்ட 40 நாட்கள் கஷ்டப்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு பேர் புழல் சிறையிலும், 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் சென்னையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .