முருகனுக்கு உகந்த சஷ்டி: வேல் யாத்திரை இன்று தொடங்கி டிசம்பர் 6 வரை நடத்த திட்டமிட்டது ஏன்
சென்னை: முருகனின் ஆயுதம் வேல். வேலாயுதத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. வேல் யாத்திரைக்கு தமிழக அரசு உத்தரவு கொடுக்காவிட்டாலும் யாத்திரை தொடங்குவோம் என்றும் கூறி வருகின்றனர் பாஜகவினர். அது ஏன் நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை யாத்திரை நடத்துகிறது பாஜக என்ற கேள்வி எழலாம். முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி திதி இன்றைய தினம் எனவேதான் வேல் யாத்திரையை ஆரம்பிக்கிறது. டிசம்பர் 6ஆம் தேதி சஷ்டி திதி என்பதால்தான் அன்றைய தினம் வேல் யாத்திரையை நிறைவு செய்ய முடிவு செய்திருக்கிறது.
Recommended Video
15 திதிகளில் சஷ்டி திதி ஆறாவது திதி. ஆறுமுக கடவுளுக்கு உகந்த திதி. அடுத்த மாதம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வரும் தேய்பிறை சஷ்டி திதியான இன்றைய தினம் பாஜகவினர் வேல் யாத்திரையை தொடங்க முடிவு செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணி. திருச்செந்தூர் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்து திருத்தணியில் தன்னுடைய கோபத்தை தனித்துக்கொள்கிறார் முருகப்பெருமான் என்கின்றன புராணங்கள்.
வேல் யாத்திரை நடத்த திருத்தணி புறப்பட்டார் எல். முருகன்- கோவிலில் ஏராளமான போலீஸ் குவிப்பு!
வேல் யாத்திரை
கந்த சஷ்டி கவசம் தொடர்பான சர்ச்சை உருவான பின்னர் பாஜகவினர் முருகப்பெருமானையும் கந்த சஷ்டியையும் கையில் எடுத்தனர். சஷ்டி திதி நாட்களில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய இணைய தளங்கள் மூலம் அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து வேல் பூஜை செய்தனர். இப்போது வேல் யாத்திரையை அறிவித்துள்ளனர்.
அறுபடை வீடுகளுக்கும் பயணம்
நவம்பர் 6ஆம் தேதி தேய்பிறை சஷ்டி திதி. இன்றைய தினம் திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி இதே போல ஒரு தேய்பிறை சஷ்டி திதியில் வேல் யாத்திரையை முடிக்க திட்டமிட்டிருந்தது தமிழக பாஜக.
ஹைகோர்ட்டில் அரசு பதில்
வேல் யாத்திரைக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உயர்நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று கூறி மறுத்து விட்டது. அனுமதி தராவிட்டால் தடையை மீறுவோம் என்று பாஜகவினர் கூறினர்.
எல். முருகன் பயணம்
சாமி தரிசனம் செய்வதற்காக திருத்தணி செல்வதாக கூறிய முருகன் காலையிலேயே கையில் வேலுடன் புறப்பட்டு விட்டார். இந்த சூழ்நிலையில்தான் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூரை சேர்ந்த 1010 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மலை மீது ஏற தடை
சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக பாஜக நிர்வாகிகள் நேற்றிரவே கைது செய்யப்பட்டனர்.
தடையை மீறக்கூடாது
நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேல் யாத்திரையை தொடங்குவோம் என அக்கட்சியின் தமிழக மாநில துணைத்தலைவர் வி. பி. துரைசாமி தெரிவித்துள்ளார். அரசின் உத்தரவை மதித்து பாஜக வேல் யாத்திரையை கைவிடவேண்டும். தடையை மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சங்கடம் தீர்க்கும் சஷ்டி
சஷ்டி விரதம் இருந்தால் சங்கடம் தீரும் என்பார்கள் பாஜக மாநில தலைவர் எல். முருகன் சஷ்டி திதியான இன்றைய தினம் காவி உடை உடுத்தி கையில் வேலுடன் பேரணியில் கிளம்பியிருக்கிறார். இந்த யாத்திரை சங்கடம் தீர்க்குமா? சங்கடத்தை கொடுக்குமா பார்க்கலாம்.