"தூள் தூளாக" நொறுங்கிய கலக்கங்கள்.. பெங்களூரையே அதிர வைத்த சசிகலா.. அப்ப சென்னையில்..?
சசிகலாவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது
சென்னை: சசிகலா இன்று சென்னைக்கு கிளம்பும் நேரம், எப்படியும் தொண்டர்கள் திரளுவார்கள்.. பொதுமக்கள் திணறுவார்கள்.. இதனால் நிச்சயம் மோதல், அல்லது கைகலப்பு ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பும், கலக்கமும் பரவலாக ஏற்பட்டு வந்த நிலையில், அவை அத்தனையும் சல்லி சல்லியாக நொறுங்கிவிட்டது.. "ஸ்மூத் பயணமாக" சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் சசிகலா..!
ஒரு வாரம் ரெஸ்ட்டில் இருந்த சசிகலா இன்று காலையில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். சசிகலாவுக்கு வெகுவான வரவேற்பளிக்க அவரது ஆதரவாளர்களும், அமமுகவினரும் எல்லை பகுதியில் விடிகாலையிலேயே குவிய ஆரம்பித்துவிட்டனர்..
அதேபோல, தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பயணம்
ஆனால், அவர் பயணத்துக்கு போலீசார் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்... அதாவது சசிகலா வாகனத்தின் பின்னாடி 5 வாகனங்கள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளது... மற்ற வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும்.
பட்டாசு
அதேபோல, சசிகலா உள்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதியில்லை... பட்டாசு வெடிக்கவும் பேண்ட் வாத்தியத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது... அதேபோல, சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளதால், வழியிலேயே அவரது காரில் இருந்து கொடியை அகற்றப்போவதாகவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
மேளதாளம்
இத்தனை கட்டுப்பாடுகளுடன்தான் காலையில் கிளம்பினார் சசிகலா. கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.. நூற்றுக்கணக்கான கார்கள் வழியெங்கும் காணப்பட்டன.. அதேபோல தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டு அமர்க்களப்படுத்திவிட்டனர்.
கார்கள்
இவ்வளவு நடந்தும், பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என்பதே ஆச்சரியம்.. சசிகலா உட்பட அவருக்கு பின்னாடி வந்த அனைத்து கார்களும் தங்குதடையின்றி எளிதாக வந்தன.. இதை பார்த்து கர்நாடக மக்களே ஆச்சரியப்பட்டு வேடிக்கை பார்த்தனர்.. இதில் ஒருபடி மேலே போய், சீரிய பணிகளுக்கு உதவியது போலீஸ்காரர்கள்தான்.. பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் சசிகலா கார்கள் செல்ல வழி ஏற்படுத்தி தந்தது கர்நாடக போலீஸ்.
சென்னை
பெங்களூரிலேயே இப்படி என்றால் தமிழகத்தில் எப்படி இருக்குமோ என்ற அடுத்த டென்ஷன்தான் நமக்கு எகிறி உள்ளது.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் சென்னை போலீசார் களத்தில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா சென்று மரியாதை செலுத்துவார், அதிமுக தலைமையகம் செல்லுவார் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவின் சென்னை வருகை மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக அமைந்து வருகிறது.