சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம்- டெல்லியில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு
சசிகலா வருகையால் அதிமுகவிற்குள் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி பட கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவை அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். சசிகலா கட்சியிலேயே இல்லை சிறையில் இருந்து வந்தாலும் அவரை அதிமுகவில் இணைக்க 100 சதவிகித வாய்ப்பு இல்லை என்றும் உறுதியாக கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
Recommended Video
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி சென்றார். நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இன்றைய தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அரை மணிநேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் வர இருக்கும் நிலையில் முதல்வரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற விமானத்தில் இறக்கிவிடப்பட்ட 4மாத குழந்தை மற்றும் தாய்
பிரதமரை சந்தித்தது ஏன்
டெல்லியில் பிரதமர் மோடி சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழக அரசின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தன். புயல் நிவாரண நிதிகளை கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றார்.
அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை
இது அரசு ரீதியான பயணம்தான் அரசியல் ரீதியாக பேசவில்லை என்று கூறினார். சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னர் அதிமுகவில் இணைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதனை திட்டவட்டமாக மறுத்தார் முதல்வர் பழனிச்சாமி.
100 சதவிகிதம் வாய்ப்பில்லை
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று கூறிய முதல்வர், அவர் இப்போது அதிமுகவிலேயே இல்லை என்று கூறினார். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டார் என்றும் தெரிவித்தார். சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்
சசிகலா உடன் இருந்தவர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு வந்து விட்டதாக கூறிய முதல்வர், அதிமுகவில் எல்லாமே முடிவெடுக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று கூறினார் முதல்வர். அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் சசிகலாவை கட்சிக்குள் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பேசி வரும் நிலையில் அனைத்து சலசலப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டெல்லியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்று உறுதியாக கூறியிருக்கிறார்.