"டெல்லி இருக்கட்டும்".. நான்தான் பொதுச்செயலாளர்.. சசிகலா போட்ட கேஸ்.. வரப்போகும் முக்கிய உத்தரவு!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி விசாரணை நடத்தலாமா என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமான உத்தரவு ஒன்றை வழங்க உள்ளது. நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில் இதில் முக்கியமான உத்தரவு ஒன்றை வழங்க உள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது .
பிரிக்க முடியாதது அதிமுகவும் - உட்கட்சி பூசலும் என்று சொல்லும் அளவிற்கு கட்சியில் மோதல் நிலவி வருகிறது. அதிமுகவின் ஒரே தலைவர் நான்தான் என்று எடப்பாடி சொல்லி வருகிறார்.. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்று இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார்.
சசிகலாவோ.. நான்தான் சின்னம்மா என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். யார் தாங்க அதிமுகவில் உட்சபட்ச அதிகாரம் கொண்டு இருப்பது என்ற கேள்வி தற்போது கட்சி தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான முக்கிய வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்திருக்கிறது. டெல்லியில் பொதுக்குழு வழக்கு நடக்கும் நிலையில்தான் இங்கே இன்னொரு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
திமுகவுக்கு நெருக்கடி.. கோவையில் இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரதம்.. எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
பொதுச்செயலாளர் வழக்கு
அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பின் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஏ1 குற்றவாளியாகவும், சசிகலா ஏ 2 குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அவர் சிறைக்கு செல்லும் முன் அதிமுகவை வழி நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரனை கட்சியின் துணை பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு சென்றார். இதையடுத்து நடந்த பல்வேறு மோதல்கள் மற்றும் கூட்டங்களை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடியது.
நீக்கம்
அந்த பொதுக்குழுவில் சசிகலா, டிடிவி தினகரன் இருவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் ஒருவரை கட்சி நிர்வாகிகள் சேர்ந்து நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விதிகளில் இடம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. அதன்பின் ஓபிஎஸ் - எடப்பாடி ஆகியோர் இணைப்பை தொடர்ந்து கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.பொதுக்குழு மூலம் உருவாக்கப்பட்ட இந்த பதவிகளை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.
வழக்கு
இந்த நிலையில் தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழு செல்லாது, என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நான்தான் பொதுச்செயலாளர். என்னை எப்படி நீக்க முடியும்? பொதுக்குழுவில் இப்படி முடிவு எடுக்க அதிகாரமே இல்லை என்று சசிகலா சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா கூடுதல் மனு தாக்கல் செய்து இருந்தார்.
தள்ளுபடி
ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சசிகலா வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர் செல்வம், பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்யாமலே நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சசிகலாவை கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது. அதனால் அவரின் மனுவை ஏற்க கூடாது. சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக பன்னீர் செல்வம், பழனிச்சாமி மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது
தள்ளுபடி மனு
இதில் ஓபிஎஸ், இபிஎஸ் மனுவை ஏற்ற நீதிமன்றம், சசிகலா மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த இந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே சிவில் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்துவிட்டது. இது மேல்முறையீடு. அதனால் இரட்டை நீதிபதி அமர்வே இதை விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது. ஆனால் இரட்டை நீதிபதி விசாரிக்க வேண்டியது இல்லை. கோர்ட் விதிகளை ஆராய்ந்தோம். தனி நீதிபதி விசாரித்தால் போதும் என்று சசிகலா தரப்பு வாதம் வைத்தது. இதை கேட்டுக்கொண்டு நீதிபதி.. தனி நீதிபதி விசாரிக்கலாமா இல்லையா என்பது பற்றி விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் சசிகலா மேலும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.