சசிகலாவுக்கு மெகா "பதவி".. கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் தினகரன்.. மிரண்டு பார்க்கும் கட்சிகள்
சசிகலாவுக்கு முக்கிய பதவி தர போவதாக தெரிகிறது
சென்னை: சசிகலாவுக்கு மிக முக்கிய பதவி ஒன்று தரப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.. இதனால் தமிழக அரசியல் களம் படுசூடாக தகித்து கொண்டிருக்கிறது..!
சசிகலா சென்னைக்கு வந்த அன்று "ரோடு ஷோ" நடத்தி மிகப்பெரிய மாஸ் கிளப்பினார்.. இந்த ஒருநாளே இப்படி இருக்கிறதே, இனி அடுத்தடுத்த அதிரடிகளில் அதிமுக என்னாகுமோ என்ற கலக்கம் வரும் அளவுக்கு பரபரப்புகள் நிகழ்ந்தன. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.
அதேசமயம், சசிகலா 4 வருஷம் ஜெயிலில் இருந்து வந்திருப்பதால், ஆதரவாளர்கள் தரப்பில் இப்படி ஒரு பரபரப்பு இருக்கலாம்.. மற்றபடி மக்கள் மனங்களில் சசிகலாவுக்கு அந்த அளவுக்கு இடம் இல்லை என்று ஒருசில அரசியல் நோக்கர்களும் கருத்து சொன்னார்கள்.
அதிமுக
இதனிடையே, சசிகலா தனக்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு அதிமுக தலைகளிடம் இருந்து கிடைக்கவில்லை என்று சற்று அதிர்ந்து போனது உண்மையே.. "நீங்க வேணும்னா பாருங்க, சசிகலாவை வரவேற்க ஓபிஎஸ் சென்னை பார்டருக்கே வந்து நிற்பார்" என்று டிடிவி தினகரனும் தன் ஆதரவாளர்களிடம் சொல்லி கொண்டே இருந்தார். இதற்கு பிறகுதான் சசிகலா சுதாரிக்க ஆரம்பித்தார்.
காய் நகர்த்தல்
முக்கிய புள்ளிகளை குறி வைத்து காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளார்.. அவரது அரசியல் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை. நித்தம் ஒரு யூகங்கள், நித்தம் ஒரு கணிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. ஜெயலலிதா பிறந்த நாள் 24-ம் தேதி இருப்பதால், அன்றைய தினம் அல்லது அதற்கு மறுநாள் இருந்தே அதிரடிகள் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
சென்ட்டர்
இதை மையப்படுத்திதான் பிப்ரவரி 25ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுகிறார் தினகரன்... ஜூம் மீட்டிங் மூலமாக இந்த கூட்டம் நடக்க போகிறது போலும்.. இந்த பொதுக்குழுவில் 10 மாவட்டங்களுக்கு ஒரு சென்டர் என்று மாநிலம் முழுவதும் 10 கல்யாண மண்டபங்கள் ஏற்பாடாகி வருகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில், தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாகவும் கூட்டணி விஷயம் தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, சசிகலாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
அதிமுக
இதற்கு காரணம், ஏற்கனவே அமமுக கட்சி தொடங்கும்போது, தலைமை பொறுப்பு சசிகலாவுக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.. ஆனால்,சசிகலா அமமுகவில் கட்சி உறுப்பினர்கூட கிடையாது.. ஒருவேளை இந்த பொதுக்குழுவில் அவருக்கு ஏதாவது பொறுப்பு வழங்கப்பட்டுவிட்டால், அப்போது முதல் அவருக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்.. அமமுகவின் பிரதிநிதியாகவே சசிகலா கருதப்படுவார்.
பாஜக
அமமுகவில் சசிகலா இணைந்த பிறகு, தமிழகம் முழுக்க சுற்றுப்பயணத்தை செய்து தேர்தலை சந்திக்ககூடும்.. அதன்பிறகு, ஒருகுறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றுவிட்ட பிறகு, அதை வைத்து அதிமுகவை கட்சிக்குள் கொண்டுவரும் முயற்சியிலும் ஈடுபடக்கூடும் என்கிறார்கள்.. இந்த இணைப்பு விஷயத்தை பொறுத்தவரை பாஜக ஒதுங்கி கொண்டுவிட்டதாகவே தெரிகிறது..
இரட்டை இலை
ஏனென்றால், இரட்டை இலை எங்கே இருக்கிறதோ அங்கேதான் வெற்றி கிடைக்கும் என்று எடப்பாடியார் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.. சசிகலா பெயரை முன் வைத்தால், தென்மண்டலத்தில் வேண்டுமானால் சாதீய ஓட்டுக்கள் கிடைக்குமே தவிர, மக்களிடம் அதிருப்தி கிடைத்துவிடும் என்றும் நம்புகிறார்.. எடப்பாடியாரின் இந்த முடிவை பிரதமர் ஏற்று கொண்டதாகவே தெரிகிறது.. ஓபிஎஸ், இபிஎஸ் 2 பேரின் கையை உயர்த்தி பிரதமர் காட்டியதுடன், எடப்பாடியாரை தனியாக அழைத்து பேசியதும் அதற்கு அச்சாரமாகவே எடுத்து கொள்ள வேண்டி உள்ளது.
பொறுப்பு
ஆக, அதிமுக பொறுத்தவரை இப்போதைக்கு சசிகலா தனித்து விடப்பட்டுள்ளார் என்பதும், அமமுகவில் முக்கிய பொறுப்பை கையில் எடுக்க போகிறார் என்பதுமே இப்போது நமக்கு கிடைத்து வரும் செய்தியாகும்..!