தா. பாண்டியன் மறைவு அப்பாவை இழந்தது போல உணர்கிறேன் - சசிகலா இரங்கல்
உடல்நலக்குறைவு வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தந்தையைப் போல பரிவு காட்டியவர் தா. பாண்டியன், அவரை இழந்தது மீண்டும் எனது தந்தையை இழந்தது போல உணர்கிறேன் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மரியாதைக்குரிய தா. பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கட்சியைச் சேர்ந்த தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான தா.பாண்டியன், 89 வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். கடந்த 24ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிறுநீரக பிரச்சினை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை. இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தா.பாண்டியன் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். தா. பாண்டியனின் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலை பட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு நடைபெறுகிறது.
தொழிலாளர்களின் தோழர்; உறுதிமிக்க தலைவர்... தா.பாண்டியனுக்கு புகழாரம் சூட்டிய மு.க.ஸ்டாலின்!
தமிழக அரசியலில் பிரபலமான தலைவராக விளங்கிய தா.பாண்டியனின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தா. பாண்டியன் மறைவுக்கு சசிகலா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் மதிப்பிற்குரிய தா. பாண்டியன் தந்தையைப் போல என்னிடம் பரிவு காட்டியவர். அவரை இழந்தது எனது தந்தையை மீண்டும் இழந்தது போல ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கின்றேன். நான் உடல் நலம் குணமடைந்து பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய உடன் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அரசியல் பயணத்தில் வெற்றியடைய வாழ்த்து கூறினார். மரியாதைக்குரிய தா. பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அவரது கட்சியைச் சேர்ந்த தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.