அதிமுகவுக்கு செல்லவே முடியாத நிலைக்கு போய்விட்டதா 'சசிகலா குடும்பம்'
Recommended Video
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தினகரன் அமமுக என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த இயக்கம் இனி அரசியல் கட்சியாக உள்ளததால் சசிகலா குடும்பத்தினர் இனி அதிமுகவிற்கு செல்லவே முடியாத நிலைக்கு போய்விட்டது என்றே தோன்றுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கை ஓங்கி இருந்தது. இவர்கள் யாரை முன்னிறுத்துகிறார்களோ அவர்களே அமைச்சர்களாகவும், அவர்களுக்கே எம்பி, எம்எல்ஏ சீட்டும் கிடைத்து வந்தது.
அப்படி 2001ம் ஆண்டு திடீர் முதல்வராக வந்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதேபோல் 2017ம் ஆண்டு முதல்வராக பதிவேற்க முடியாமல் சசிகலா சிறைக்கு சென்ற போது, அவரால் முன்னிறுத்தப்பட்டு முதல்வராக மாறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.
ஒபிஎஸ் யுத்தம்
அதன்பிறகு சசிகலா குடும்பத்தை எதிர்த்து இப்போது துணை முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரியில் தர்ம யுத்தம் தொடங்கினார். இதன் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. எனினும் மெஜாரிடிக்கு ஆபத்து ஏற்படாததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மாறினார்.
கட்சியில் எதிர்ப்பு
இதே நேரம் அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்துவிட்டு சசிகலா சிறைக்கு சென்றார். இதற்கு அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் முக்கிய நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் பக்கம் சென்றனர்.
முதல்வர் மீது வழக்கு
இதற்கிடையே ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், பன்னீர் செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அப்போது ஓட்டுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் பழனிச்சாமி உள்பட பலர் மீது புகார் எழுந்தது. மேலும் டிடிவி தினகரனும் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சிறை சென்றார்.
டிடிவி தினகரன் நீக்கம்
இதற்கிடையில் அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் அணியை சேர்க்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்தார். அவருக்கு துணை முதல்வர் பதவியும் அளித்தார்.அதேநேரம் 18எம்எல்ஏக்களை வைத்து முதல்வரை மாற்ற முயன்றதாக டிடிவி தினகரனை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கினார். இதன் பின்னணியில் பிரதமர் மோடி இருந்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது.
ஒபிஎஸ்-ஈபிஎஸ்
அதன்பின்னர் ஒபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து அதிமுகவில் சீர்திருத்தங்களை செய்தனர். இதன்படி சசிகலா குடும்பத்தினரை மொத்தமாக அதிமுகவில் இருந்து வெளியேற்றினர். மேலும் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்மொழிந்ததையும் திரும்ப பெற்றனர். தேர்தல் ஆணையம் இதனை ஏற்றுக்கொண்டது.
ஈபிஎஸ், ஓபிஎஸ் வெற்றி
இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற டிடிவி தினகரன் இரட்டை இலை மற்றும் அதிமுகவிற்கு சொந்தம் கொண்டாடி வழக்கு போட்டார். அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமைக்குத்தான் அதிமுகவும் , இரட்டை இலையும் சொந்தம் என கைவிரித்தது.
அரசியல் கட்சி
இதற்கிடையே அமமுக என்ற இயக்கத்தை தொடங்கி டிடிவி தினகரன் பரிசுப்பெட்டி சின்னம் மூலம் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ளார். அதிமுக இனி கிடைக்காது என்ற சூழலில் அமமுக இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தினகரன் முடிவு செய்துள்ளார்.
ஈபிஎஸ்-ஓபிஎஸ்
எனவே இனி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் அதிமுகவுக்கு செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் மறைவின் போது அதிமுகவில் ஆரம்பித்த சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் ஜெயலலிதா மறைவுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. இப்போது அதிமுக முழுமையாக முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கைவசம் சென்றுவிட்டதாக தெரிகிறது.