டிடிவி தினகரனின் அதிமேதாவித்தன செயல்பாடு.. சசிகலா நல்ல முடிவு எடுத்துள்ளார் - திவாகரன் பொளேர்
சசிகலா சிறைக்குப் போக காரணமே டிடிவி தினகரன்தான் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். தினகரன் அதிமேதாவித்தனமாக செயல்பட்டதால்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார் திவாகரன்.
சென்னை: சசிகலாவின் அரசியல் விலகல் மிகப்பெரிய விவாதப்பொருளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஓய்வு குறித்த அறிக்கைக்கு காரணமே டிடிவி தினகரனின் அதிமேதாவித்தனமான செயல்பாடுதான் என்று கூறியுள்ளார் திவாகரன்.
Recommended Video
சசிகலாவின் முடிவை முழுமனதோடு வரவேற்பதாக கூறியுள்ள திவாகரன், சசிகலாவின் துரோகிகள் வெளியில் இல்லை, எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 5 அல்லது 6 தொகுதிகள்.. இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
ராஜ மாதா என்றும் வீரத்தமிழச்சி என்றும் வர்ணிக்கப்பட்டவர் சசிகலா. சிறையில் இருந்து வெளியே வந்தாலே போதும் தமிழக அரசியலில் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் அதிமுகவே ஆட்டம் காணும் என்றும் அவரது ஆதரவாளர்கள் எச்சரித்தனர். அப்படி எல்லாம் எதுவும் இல்லை நான் அரசியலை விட்டே விலகப்போகிறேன் என்று ஒரே அறிக்கையில் கூறி சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் சசிகலா.
தினம் ஒரு அறிக்கை
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆன உடனேயே டிடிவி தினகரனின் பேட்டியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதிமுகவை கைப்பற்றுவோம் என்றும், சசிகலா தலைமையில் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என்றும் கூறினார் டிடிவி தினகரன்.
சசிகலாவினால் சலசலப்பு
கட்சிக்கொடி கட்டிய காரில் சென்னை வந்த சசிகலா, நானே அதிமுகவின் பொதுச்செயலாளர், தன்னை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதிமுகவினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுஎதிரி திமுகவை வீழ்த்த வேண்டும் என்றும் அதிரடியாக பேட்டியளித்தார். இந்த பேட்டி குறித்து சில சலசலப்புகள் எழுந்தாலும் ஓபிஎஸ், இபிஎஸ் எந்த கருத்தும் கூறவில்லை.
விலகிய சசிகலா
பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய நாளில் இருந்தே அமைதியாக இருந்த சசிகலா, கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் முக்கிய பிரபலங்களை சந்தித்து பேசினார். அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில் திடீரென அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறியுள்ளார். எப்போதுமே செய்தியாளர்களை அழைத்து பேட்டியளிக்கும் சசிகலா, திடீரென அறிக்கை அளித்தது விவாதப்பொருளாகியுள்ளது.
டிடிவி தினகரனின் அதிமேதாவித்தனம்
சசிகலாவின் இந்த முடிவை அவரது சகோதரர் திவாகரன் வரவேற்றுள்ளார். எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர், எங்களின் சொந்த ரத்தம், அவருக்கும் வயதாகி விட்டது. இப்போது அவர் எடுத்துள்ள முடிவு சரியான முடிவுதான் என்று கூறியுள்ளார் திவாகரன்.
குடும்பத்திற்குள் துரோகிகள்
சசிகலா சிறைக்குப் போக காரணமே டிடிவி தினகரன்தான் என்று குற்றம் சாட்டும் திவாகரன், சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் போது முதல்வர் வேட்பாளராக அறிவித்ததுதான் மிகப்பெரிய முட்டாள்தனம் என்று கூறியுள்ளார். சசிகலாவின் முடிவை முழு மனதாக வரவேற்கிறேன். துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். அவரைச் சுற்றியுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரால்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம் என்பதும் திவாகரனின் கருத்தாகும்.
வீராங்கனை
சசிகலா ஒரு வீராங்கனை. சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போல் இந்த முடிவை அறிவித்துள்ளார். இதற்கு காரணம் அவரை துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்து இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளராக அறிவித்த தினகரன்
டிடிவி தினகரன் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது. இப்போது சசிகலா எடுத்திருப்பதும் நல்ல முடிவுதான். சசிகலா அவர்களின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்பதே எனது விருப்பமும் என்று கூறியுள்ளார் திவாகரன்.
குடுமிப்பிடி சண்டை
சசிகலாவிற்கு அரசியல் எதிரிகளை விட உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள சண்டையே அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுவே அவரது அரசியல் ஓய்வு அறிவிப்புக்கு காரணமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறிய நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் பேட்டியும் இதையே உணர்த்துகிறது.