இன்று ஜெயலலிதா நினைவிடம் செல்வாரா சசிகலா? அதிரடி ட்விஸ்ட் இருக்கு.. பரபரப்பு
சென்னை: எஞ்சிய பணிகளை முடிப்பதற்காக மூடப்பட்ட ஜெயலலிதா நினைவிடமும் இன்று திறக்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்து சென்னை திரும்பியுள்ள சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று செல்வாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த சசிகலா நடராஜன், கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆனார். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிசிக்சை பெற்று பின்னர் பெங்களூருவில் ஒரு வாரம் ஓய்வெடுத்தார்,
அதன் பின்னர் கடந்த 8ம் தேதி சென்னை திரும்பினார் சசிகலா. சுமார் 23 மணி நேரம் மெதுவாக ஊர்வலமாக வந்து தொண்டர்களின் வரவேற்பை ஏற்றார். ஆனால் சசிகலா வருவதற்கு முன்பே மீண்டும் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது. இதனால் அன்றைக்கு சசிகலாவால் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல முடியவில்லை,
யாரும் வரவில்லை
இந்நிலையில் சசிகலா தொடர் ஓய்வில் இருந்து வந்தார். கடந்த இரு நாட்களாக சில குறிப்பிட்ட நபர்களை மட்டும் சந்தித்து ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.ஏற்கனவே, சசிகலா சென்னை வந்ததும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் அவரை சந்திக்க வருவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது
வெளியே வரவில்லை
ஆனால், இதுவரை யாரும் அவரை வந்து சந்திக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் போனில் பேசியதாக கூறப்படுகிறது. சென்னை திரும்பிய சசிகலா இதுவரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை.. அரசியல் நிலைப்பாடு என்ன என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
ஜெயலலிதா நினைவிடம்
இந்த சூழலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே, திறக்கப்பட்டு மீண்டும் எஞ்சிய பணிகளை முடிப்பதற்காக மூடப்பட்ட ஜெயலலிதா நினைவிடமும் இன்று திறக்கப்பட உள்ளது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். இதேபோல், அருங்காட்சியகத்தையும் முதல்வர் எடப்பாடியார் திறந்து வைக்கிறார்.
மரியாதை செலுத்துவாரா
இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு ஜெயலலிதா நினைவிடம் முழுமையாக திறக்கப்படுகிறது. எனவே, சசிகலாவும் இன்று ஜெயலலிதா நினைவிடம் வந்து மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
அரசியல் நடவடிக்கை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் வருகைக்கு பின்னர் அவர் அஞ்சலி செலுத்த வாய்ப்பு உள்ளதாக அமமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி வந்தால் சசிகலா பத்திரிகையாளர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது, அப்போது அவரது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து தெரியக்கூடும்..