சசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்? கடுப்பில் பாஜக
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், தோழி சசிகலா, பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டார் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியால் வழங்கப்பட்ட அறிக்கை, தற்போது மீண்டும் கசிந்துள்ளது. இது தமிழக அரசியலில் முக்கியமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் .
இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் சசிகலா இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் (அதாவது ஜெயலலிதா மறைந்த 2 மாதங்கள் கழித்து) தீர்ப்பளித்தது.
சிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்
3 வருடம்
சொத்துக்குவிப்பு வழக்கில், இவர்களுக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். எனவே, அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் மூன்று ஆண்டுகளை சிறையில் கழிக்க உள்ளார் சசிகலா.
மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை காரணமாகச் சொல்லி, நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை வரும் மார்ச் மாதம் சிறையில் இருந்து விடுதலை செய்ய திட்டங்கள் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் அதிமுகவில் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்பது பாஜகவில் சில தலைவர்களின் நோக்கமாக இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.
தொடர் தோல்விகள்
லோக்சபா பொதுத் தேர்தலில், அதிமுக தேனி ஒரு தொகுதியைத் தவிர, பிற தொகுதிகளில் படுதோல்வியை சந்தித்தது. 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் அதிக தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது. 9ல் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து விட்டது என்பது, உறுதியாக தெரிந்த பிறகு நடைபெற்ற வேலூர் லோக்சபா தேர்தலிலும் கூட, பலம் மிகுந்த வேட்பாளர் அதிமுக கூட்டணி பக்கம் இருந்தாலும், திமுக தான் வெற்றி பெற்றது.
தலைமைக்கான தேடல்?
இவ்வாறு அதிமுக தொடர் தோல்விகளை சந்திப்பதற்கு அந்த கட்சியில் வலுவான தலைமை இல்லை என்பது தான் காரணம் என பாஜகவில் சில மூத்த தலைவர்கள் நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகள், ஏற்கனவே இந்த கருத்தை பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தனர். எனவே இந்த வெற்றிடத்தை சசிகலா போன்ற ஆளுமை நிரப்புவார் என்றும் பாஜகவின் சில தலைவர்கள் நம்புகிறார்கள்.
பாஜகவுக்கும் பலன்
இந்த நிலைமையில்தான், சமீபகாலமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன், பாஜகவுக்கு எதிராக பெரிதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்காமல் இருந்து வருகிறார். இது இந்த யூகங்களை மேலும் நிரூபிப்பது போல இருந்தது. மார்ச் மாதம் சசிகலா விடுதலை ஆனால் அடுத்த ஓராண்டில் அதிமுகவை பலப்படுத்தி, 2021 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அது அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் பலன்தரும் என்று பாஜகவில் சிலர் கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
மீண்டும் கசிந்த அறிக்கை
இப்படியான சூழ்நிலையில்தான் சசிகலா சிறையில் விதிமீறி எதிராக கர்நாடக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் கடந்த ஜனவரி மாதம் அந்த மாநில அரசுக்கு வழங்கிய அறிக்கை தற்போது மீண்டும் கசிய விடப்பட்டுள்ளது. "இந்த அறிக்கையின் அம்சங்கள் ஏற்கனவே ஜனவரி மாதம் வெளியானவைதான். மீண்டும் இப்போது அதை மீடியாக்கள் வாயிலாக வெளியிட காரணம் சசிகலாவை தொடர்ந்து சிறையிலேயே வைக்க ஆசைப்படுவோர் சிலரது கைங்கரியம் தான்" என்று பாஜக வட்டாரத்தில் நம்மிடம் பேசிய ஒருவர் கூறுகிறார். அதிமுக தலைமையில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது என்று விரும்பக்கூடிய சிலர், இந்த அறிக்கையை தமிழ் டிவி சேனல்களுக்கு மீண்டும் கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த பிரமுகர் நம்மிடம் தெரிவிக்கிறார்.
அதிருப்தி
ஒருவகையில் சசிகலா தொடர்பாக வெளியாகியுள்ள இந்த செய்திகள், தமிழக அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த அறிக்கை வெளியானதால், பாஜகவில் உள்ள சிலர் அப்செட்டாக இருப்பதால் அதன் தாக்கம் அடுத்து வரும் நாட்களில் எதிரொலிக்க கூடும் என்று தெரிகிறது. சில நாட்கள் பொறுத்திருந்து பாருங்கள். பல அதிரடி திருப்பங்களுக்கு தமிழகம் சாட்சியாகும் வாய்ப்பு உள்ளது.