சசிகலாவிற்கு இப்போ ராகு திசை நடக்குது...அதான் இப்படி - நாகராஜா கோவிலில் வழிபட்ட மாஜி எம்எல்ஏ
சசிகலாவிற்கு இப்போது ராகு திசை நடப்பதால் இது போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை: கொரோனா பாதிப்பினால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சசிகலா. சிறையில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பிவிடுவார் என்று அவரது உறவினர்களும் தொண்டர்களும் நினைத்திருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் ஜாதகப்படி அவருக்கு தற்போது ராகு திசை நடப்பதால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்தியுள்ளார் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மாஜி எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்.
சசிகலா பிறந்தது 18/08/1954. மீனம் ராசி ரேவதி நட்சத்திரம். அவரது ஜாதகப்படி இப்போது ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என கிரகங்கள் எல்லாமே சாதகமாக உள்ளன. லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியிருந்தாலும் அவருக்கு தற்போது தசா புத்தியை பார்த்தால் ராகு திசை நடைபெறுகிறது.

ராகு திசை 18 ஆண்டுகள் உள்ளன. அவருக்கு செவ்வாய் திசை முடியும் தருணத்தில் சிறைக்கு போனார். ராகு திசையில் சிறை செல்லும் அளவிற்கு அவமானங்களை பட்ட சசிகலாவிற்கு இப்போது உடல்நல பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் செவ்வாயும் ராகுவும் இணைந்துள்ளதுதான்.
இதன் காரணமாக செவ்வாய் திசையில் படாத பாடு பட்டு சிறைக்கு சென்று ராகு திசையில் உடல் நல பாதிப்பினால் அவதிப்படுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலே அந்த தசாபுத்தி நடைபெறும் போது பல அவமானங்களை பட வேண்டும் என்பது விதி. அதன் பலனைத்தான் சசிகலா இப்போது அனுபவிக்கிறார் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சசிகலா ஜாதகத்தில் கஜ கேசரி யோகம், முசல யோகம், உச்சம் பெற்ற சனி,குரு சண்டாள யோகம் என பல யோகங்கள் இருந்தாலும் அவருக்கு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகே சிரமத்திசைதான். அதனால்தான் முதல்வராக வேண்டும் என்று நினைத்த சசிகலாவினால் வெற்றி பெற முடியாமல் போனது என்பது ஜோதிடர்களின் கருத்தாகும்.
இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள சசிகலா விரைவில் குணமடைய வேண்டி நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், தனது குடும்பத்துடன் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் வழிபாடு செய்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலா கூடிய சீக்கிரம் குணமடைந்து தமிழகத்திற்கு வர வேண்டும். அதற்காக தான் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தேன் என்று கூறினார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிக்கிய நாஞ்சில் முருகேசன் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என்று கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications