ராஜமாதான்னு சும்மாவெல்லாம் சொல்லலை... சசிகலா போட்டிருக்கும் பிளானே 'அதகள' லெவலாம்
சென்னை: தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்த அறிக்கையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என கூறியிருப்பது மேலோட்டமான வார்த்தை அல்ல.. இந்த ஒற்றை வரிகளில்தான் சசிகலாவின் எதிர்கால திட்டமே இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் ஏற்றுக் கொண்டுள்ளார். என்னதான் இருவருக்கும் விரிசல் இருப்பதாக சொன்னாலும் எதுவும் வெளிப்படையாக வரவில்லை.
தற்போதைய நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் வசமே அதிமுக இருக்கிறது. இதனால்தான் சசிகலாவை மீண்டும் சேர்க்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டது. ஆனால் ஈபிஎஸ் தரப்பு இதற்கு இம்மியளவு கூட இடம்தரவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.
சசிகலாவின் அரசியல்
அரசியலைவிட்டு விலகுவதாக சசிகலா வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அரசியல் வாசகங்கள்தான் இப்போது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது; அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது அப்பட்டமான அரசியல் அல்லாமல் வேறு என்கிறார் மூத்த விமர்சகர்.
சசிகலா ராஜதந்திரம்
சரி அப்படி என்னதான் சசிகலா திட்டம் போட்டிருக்கிறார்? என விசாரித்தோம்.. சசிகலாவை பொறுத்தவரை தாம் இல்லாத அதிமுக ஒருமுறை தேர்தலை சந்திக்கட்டும். எப்படி முடிவு வருகிறது என்பதைப் பொறுத்தே அடுத்த ஆட்டம் ஆடலாம் என காத்திருக்கிறாராம் சசிகலா. ஒரு வெற்றியை பெறுவதற்காக சற்று பின்வாங்குவது போல பாசாங்கு செய்து தம்மை நோக்கி எதிரிகளை வரவழைக்க வேண்டும் என்கிற ராஜதந்திரம்தான் சசிகலாவின் அறிக்கையாம்.
தேர்தல் முடிவுக்காக வெயிட்டிங்
அரசியலை விட்டு விலகுவது என்கிற முடிவை ஒரு அக்னி பரீட்சையாகவே கருதுகிறாராம் சசிகலா. ஜெயலலிதா காலத்தில் இருந்து தம்மால்தான் அதிமுக சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள முடிந்தது; இப்போது தம் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஒரு தேர்தலை கட்சி சந்திக்கிறது. இதில் ஈபிஎஸ் வென்றுவிட்டால் அவர் சாணக்கியர்.. தேர்தலில் அதிமுக தோற்றால் எந்த ஒரு தடையுமே இல்லாமல் அதிமுக தலைவர்களும் தொண்டர்களும் தம்மை தேடி வருவார்கள்.. தம்மை தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த சொல்வார்கள்.. அப்போது பார்த்து கொள்ளலாம் என்பதுதான் சசிகலாவின் திட்டமாம்.
மீண்டும் வர காரணம்
அப்போது, திமுகவை ஆட்சி அமைக்கவிடக் கூடாது என நான் சொன்னதை கேட்காமல் ஆட்சி அமைக்க விட்டுட்டீங்க.. வேறவழியே இல்லை.. அதிமுகவை மீட்டெடுக்க தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று மீண்டும் அரசியலுக்கு வருவேன் என சசிகலா மற்றொரு அறிக்கையையும் வெளியிடலாம் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். அதுசரி ராஜமாதா அல்லவா? அப்படித்தான் யோசிப்பார்!