உணர்ச்சிப்பெருக்கு..ஜெயலலிதா சமாதியில் சாய்ந்து அழுத சசிகலா... தொண்டர்கள் நெகிழ்ச்சி
ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த சசிகலாவிற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு உணர்ச்சி பெருக்குடன் தொண்டர்கள் காணப்பட்டனர்.
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் சசிகலா. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சசிகலாவிற்கு உணர்ச்சி மிகு வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவின் சமாதியில் சாய்ந்து சசிகலா கண்ணீர் விட்டது தொண்டர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Recommended Video
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தமிழகத்தின் அப்போதய முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா காலமானதை அடுத்து, அன்றிரவே அவசர அவசரமாக எம்.எல்.ஏக்கள் ஒன்றுகூடி சட்டமன்ற குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தனர் அதன்பிறகு தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.
கட்சியின் மூத்த தலைவர்களான செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் விளைவாக, டிசம்பர் 29ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு ஒருமனதாக கட்சியின் பொதுசெயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அதிமுக கட்சியின் 6வது பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்றார். அதன் தொடர்ச்சியாக தம்பிதுரை, சைதை துரைசாமி உள்ளிட்டோர் சசிகலாவை முதல்வராக பதவியேற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
சசிகலாவின் ஆசை
சசிகலாவை முதல்வராக முன்னிறுத்தி கோஷம் ஒலிக்கத் தொடங்கியதும் அதிமுகவில் குழப்பங்களும், சச்சரவுகளும் எழத் தொடங்கின. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்களிடம் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலாவை ஏக மனதாக ஏற்றுக் கொள்வதாக கையெழுத்து வாங்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.
ஜெ. சமாதியில் தியானம்
எந்நேரமும் சசிகலா முதல்வராக பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போதைய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் மும்பையில் முகாமிட்டிருந்ததால் சசிகலாவின் பதவியேற்பு விழா தள்ளிபோனது. பிப்ரவரி 7ஆம் தேதி இரவு 9 மணியளவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு திடீரென வந்த ஓ.பன்னீர்செல்வம், 40 நிமிடங்கள் கண்மூடி அமர்ந்து தியானம் செய்தார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றுவிட்டதாக ஓபிஎஸ் கூறியது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சசிகலா ஆதரவாளர்கள்
ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் அணிவகுத்தனர்.
இதனையடுத்து அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, துரோகங்கள் ஒருபோதும் வென்றது கிடையாது என்றும். அதுநாள்வரை ஜெயலலிதாவிற்காக வாழ்ந்ததாகவும், இனி அவரது கனவுகளுக்காக வாழ்வேன் என்றும் அறிவித்தார். அதன்பின் சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 130 பேரை அணி தாவாமல் இருக்க கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தார்.
சபதம் செய்த சசிகலா
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அதிமுக சட்டசபைக் குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சரணடைய பெங்களூரு புறப்படும் முன்னதாக ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சமாதியில் கையால் அறைந்து சபதமும் எடுத்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து பெங்களூரு சென்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
நினைவிடம் வந்த சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி பின்வாங்கினார். ஆன்மீக பயணம் சென்ற சசிகலா சில மாதங்கள் அமைதியாக இருந்து விட்டு தனது ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதிமுக பொன்விழா கொண்டாட்டங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று சசிகலா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கண்ணீர் அஞ்சலி
சனிக்கிழமையான இன்றைய தினம் ராகுகாலம் முடிந்து வீட்டில் இருந்து புறப்பட்ட சசிகலா, ஜெயலலிதா சமாதிக்கு வந்தார். கண்ணீர் மல்க சமாதியில் அஞ்சலி செலுத்தினர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி சசிகலாவிற்கு உணர்ச்சி பொங்க வரவேற்றனர். சில நிமிடங்கள் கண்ணீர் மல்க ஜெயலலிதா சமாதி முன்பாக நின்றிருந்தார் சசிகலா. சசிகலாவை ஏராளமான தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.
நல்ல எதிர்காலம்
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதாவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டு வந்தேன். ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் தமிழக மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். நிச்சயம் தொண்டர்களையும் கழகத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன் என்று கூறிவிட்டு புறப்பாட்டு சென்றார் சசிகலா.