அடுத்த தேர்தல் யுக்திக்கு தயாரான சசிகலா புஷ்பா...பரபரப்பான போஸ்டர்!!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவும் இந்துமதக் கடவுள்களை கையில் எடுத்துக் கொண்டது. பாஜகவில் சமீபத்தில் இணைந்து இருக்கும் சசிகலா புஷ்பா புதிய தேர்தல் யுக்தியை தொடங்கி இருக்கிறார்.
அதாவது வீட்டு வாசலில், ''விபூதியை அழிக்கிற கூட்டத்துக்கு, விபூதி பூசும் என் ஓட்டு எதுக்கு?? திமுகவே வராதே என் வீட்டுக்கு...'' என்ற வாசகத்தை ஓட்டியுள்ளார். இந்த வாசகத்தை தூத்துக்குடியில் 500 இல்லங்களுக்கு கொடுத்து அவர்களது வீட்டு வாசல் கதவில் ஓட்டுமாறு அளித்துள்ளாராம். அவரது இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தால், லட்சக்கணக்கானவர்களின் வீட்டில் இதே மாதிரி ஓட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இதை தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். இவரது இந்த முயற்சி எந்தளவிற்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.
தன்னை அவதூறாகவும், தவறாகவும் சித்தரித்து பேஸ்புக், கூகுள், யூ டியூப் ஆகியவற்றில் வெளியாகி இருந்த புகைப்படங்களை நீக்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, பெண்ணின் தனியுரிமை பாதிக்கப்படும் வகையில் மோசமாக சித்தரித்து படங்கள் வெளியிடுவதை நீதிமன்றம் அனுமதிக்காது. எனவே, அவரது படங்களை நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் சொற்ப வாக்கு வங்கி வைத்து இருக்கும் பாஜக அடுத்த தேர்தலை எதிர்கொள்ள எடுத்து இருக்கும் அஸ்திரம் இந்துக் கடவுள்கள். பொதுவாக தமிழர்கள் கடவுள் பக்தி அதிகம் என்றாலும், பாஜக விரிக்கும் இந்துக் கடவுள் என்ற வலைக்குள் சிக்குவதில்லை. இதைத்தான் கடந்த கால வரலாறு காட்டுகிறது.
தமிழகத்தில் 2014ல் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு வங்கி 5.56 சதவீதமாக இருந்தது. 2019 தேர்தலில் 3.66 சதவீதமாக அந்த வாக்கு வங்கி குறைந்தது. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருந்ததாகவே கருதப்பட்டது. #GobackModi என்ற ஹேஸ்டேக் அப்போது அடிக்கடி தமிழகத்தில் டிரண்ட் ஆகி வந்தது. தமிழகம் மட்டுமில்லை. கர்நாடகம் தவிர மற்ற தென் மாநிலங்களிலும் பாஜகவுக்கு தோல்வியே கிடைத்தது.
தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என்று அனைவரின் வாக்குகளும் பாஜகவுக்கு எதிராகவே பதிவானது.
குவியும் பிரச்சினைகள்.. குமுறும் தலைவர்கள்.. முழு நேர தலைவர் இல்லாமல்.. தட்டு தடுமாறும் காங்கிரஸ்!
தற்போது 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் இந்துக் கடவுள்களை பிரச்சார யுக்தியாக எடுத்துக் கொண்டுள்ளனர். காலம் காலமாக தமிழர்கள் நெற்றில் திருநீறு வைத்துக் கொண்டாலும், திராவிடக் கட்சிகளுக்குத்தான் வாக்களித்து வந்துள்ளனர். அரசியலை, ஆன்மீகத்துடன் தமிழர்கள் என்றும் இணைப்பதில்லை. இரண்டையும் வேறு வேறாகத்தான் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் முன்னெடுப்பு எந்தளவிற்கு தாமரையை தமிழகத்தில் மலர வைக்கும் என்று பார்க்கலாம்.