ஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக?
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தங்கள் கட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் தாவ தயாராக இருக்கும் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை பாஜக களமிறக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் சசிகலா புஷ்பா எந்த அணியில் இருக்கிறார் என தெரியாத அளவுக்கு இருந்தார். திடீரென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் மனு கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என லோக்சபாவில் கனிமொழி வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஈரோடு ரயில் நிலையத்துக்கு திருப்பூர் குமரன் பெயர் வைக்க வேண்டும் என்றார்.
இப்படி திமுகவுக்கு எதிராக அதிமுக எம்.பிக்கள் யாரும் செய்யாத வேலையை சசிகலா புஷ்பா தொடர்ந்து செய்து வந்தார். இதன் பின்னணியில் பாஜகதான் இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
தற்போது திமுக புதிய கல்விக் கொள்கையை மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனை முன்வைத்து மீண்டும் கோதாவில் குதித்திருக்கிறார் சசிகலா. திமுக தலைவர் ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சிக்கும் வகையிலான ஒரு பதிவு ஒன்று சசிகலா புஷ்பா பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அதில் திமுகவின் கொள்கைகளை விமர்சிப்பதை விட ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் மிகக் கடுமையாக விமர்சிக்கும் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஸ்டாலினின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்த பதிவு இருக்கிறது.
சசிகலா புஷ்பா என்ன நோக்கத்துக்காக திமுக மீது இப்படி பாய்கிறார் என விசாரித்தால் பாஜக சொல்கிற படி செயல்படுகிறவருக்கு என்ன நோக்கம் இருக்க முடியும்? என்கிற ஒற்றை பதில்தான் டெல்லி வட்டாரங்களிடம் இருந்து கிடைக்கிறது.