சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் எழும்பூர் நீதிபதி விசாரணை.. பெரா வழக்கில் நடவடிக்கை
சென்னை: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் ஜெ.ஜெ. நிறுவனத்திற்கு கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற்றது.
சசிகலா மற்றும் அவரது சகோதரி மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கை தொடர்ந்தனர். இது தொடர்பாக, சசிகலா மீது மட்டும் 3 வழக்குகள் தொடரப்பட்டன.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வருவதால், அந்நியச் செலாவணி வழக்கில் காணொலிக் காட்சி மூலம் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஒரு வழக்கில் சசிகலா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை இந்த காணொலிக் காட்சி குற்றச்சாட்டுப் பதிவு அல்லிக்குளத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தற்போது எழும்பூர் நீதிமன்றம் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
காணொலிக் காட்சி விசாரணைக்காக கடந்த 9ம் தேதி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் விசாரணை தொடங்கிய போது, காணொலி இணைப்பு கிடைக்க வில்லை.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம், மற்ற 2 வழக்குகளிலும் குற்றச்சாட்டுப் பதிவுக்காக சசிகலாவை ஆஜர்படுத்த பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி.. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி காணொலி காட்சி மூலம் சசிகலாவிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து கருவிகள் வாங்கியது, கொடநாடு எஸ்டேட் வாங்கியது ஆகியவற்றில் அந்நியச் செலாவணி பரிமாற்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி சென்னை எழும்பூர் நீதிமன்றம் சசிகலா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக சசிகலா தெரிவித்தார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சாட்சிகள் 11 பேரில் ஒருவர் இறந்துவிட்டதால் எஞ்சிய 10பேரிடமும் பிப்ரவரி 12ம் நாள் குறுக்கு விசாரணை செய்ய சசிகலாவின் வழக்கறிஞருக்கு நீதிபதி மலர்மதி அனுமதி அளித்தார்.