சசிகலா ஓய்வு: அமமுக போட்டியிடும் தொகுதிகளை குறைத்த டிடிவி தினகரன் - மார்ச் 8,9ல் நேர்காணல்
சட்டசபைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் மார்ச் 8, 9 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சட்டசபைத் தேர்லில் குறைவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட அமமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் வரும் மார்ச் 8, 9 தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் சக்தியாக அமமுக உருவெடுக்கும் என்று கருதப்பட்டது. சசிகலாவினால் அதிமுகவின் வாக்கு வங்கிக்கு பாதிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுகதான் பொது எதிரி என்றும் அதிமுக வெற்றி பெற பாடுபடுங்கள் என்றும் கூறி அறிக்கை வெளியிட்ட சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டார்.
தமிழக அரசியலில் அமமுகவுக்கு பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தது டிடிவி தினகரனை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சசிகலாவின் அறிவிப்பு அமமுக தொண்டர்களையும் சோர்வடையச் செய்துள்ளது.
அமமுக விருப்பமனு
அமமுக அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக விருப்பமனுக்களை பெறும் பணி நடைபெற்று வருகிறது. 10ஆம் தேதி வரை விருப்பமனு பெறப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் மார்ச் 8, 9 தேதிகளில் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
மார்ச் 7 விருப்பமனு அளிக்க கடைசி நாள்
அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 3.3.2021 விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 6.4.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு 7.3.2021 ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படவிருக்கின்றன.
மார்ச் 8,9ல் நேர்காணல்
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இதனைத்தொடர்ந்து விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல் வரும் 8.3.2021 மற்றும் 9.3.2021 ஆகிய இரு நாட்களிலும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதிகளை குறைத்த டிடிவி தினகரன்
அமமுக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது குறைவான எண்ணிக்கையில் மட்டுமே டிடிவி தினகரன் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாவட்டம், டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் வேட்பாளர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளாராம் டிடிவி தினகரன். இந்த வியூகம் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.