சசிகலா ராசிக்கு லாப ஸ்தானத்தில் 6 கிரகங்கள் - அரசியல் எதிர்காலம் எப்படி
நான்கு ஆண்டு காலம் பெங்களூருவில் வாசம் செய்த சசிகலா தமிழகத்திற்கு வந்தே விட்டார். அவரது ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரம் எப்படி இருக்கிறது. அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: சசிகலாவிற்கு சாதகமாகவே நவ கிரகங்களும் இருப்பதாக சொல்கின்றனர். அதுவும் லாப ஸ்தானத்தில் இப்போது ஆறு கிரகங்கள் இணைவதால் அவருக்கு அரசியல் எதிர்காலம் அமோகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ராகு திசை நடைபெறுவதால் போராட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் ஜோதிடர்களின் கருத்தாகும்.
சசிகலா வெளியே வந்த உடன் தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்று அவரது ஆதரவாளர்கள் பல மாதங்களாகவே கூறி வருகின்றனர். அவர் வெளியே வருவதற்கு முன்னதாகவே சசிகலாவின் அரசியல் எதிர்காலம் குறித்து அவரது ஆதரவாளர்கள் பல ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சசிகலாவின் ஜாதகத்தை காட்டி அவர்கள் ஆலோசனை கேட்கின்றனர். மேலும் அவர்கள், தமிழக ஜோதிடர்கள் மட்டும் அல்லாமல் வட இந்திய ஜோதிடர்களை பார்த்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
கிரகங்கள் எப்படி?
சசிகலா பிறந்தது சிம்ம லக்னம். சிம்மத்தில் சூரியன், கன்னி ராசியில் சுக்கிரன் நீசம், துலாம் ராசியில் சனி உச்சம். தனுசுவில் ராகு, செவ்வாய், மீனத்தில் சந்திரன், மிதுனத்தில் குரு கேது, கடகத்தில் புதன் என கிரகங்கள் உள்ளன. சிம்மத்தில் பிறந்தவர்கள் அரசியலில் பிரபலமாக முன்னேறுவது மிகவும் சிரமமாகும். இருவரில் அரசியலில் செல்வாக்கினை தரக்கூடிய கிரகமான செவ்வாய் பாதகாதிபதி ஆதிபத்யம் பெறுவதால் நல்ல பலன்களை கொடுக்க மாட்டார் என்கின்றனர் ஜோதிடர்கள். எனவேதான் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் மிகப் பெரிய அரசியல் லாபத்தினை பெற தகுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
கிரகங்கள் மறைவு
சசிகலா ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் அமர்ந்திருக்க அரசியல் கிரகமான புதன் 12ல் மறைந்திருக்கிறார். எனவே இவருக்கு அரசியல் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் ஜோதிடர்கள். அதே நேரத்தில் சசிகலாவின் ஆதரவாளர்கள் காசியில் பிரபல ஜோதிடர் ஒருவரைப் பார்த்து, சசிகலாவின் ஜாதகத்தைக் காட்டி, எதிர்காலம் குறித்து கேட்டிருக்கிறார்கள். அந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜையும் நடத்தியுள்ளார். சசிகலா எப்போது முதல்வர் ஆவார். அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.
சசிகலாவிற்கு சலுகை கிடைக்குமா?
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஒருவர், தனது தண்டனை காலத்தை சிறையில் இருந்து அனுபவித்து வெளியே வந்தாலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறது சட்டம். அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகள் தடை இருப்பது போல இந்த தகுதியிழப்பு நாட்களை நீக்கவும், குறைக்கவும், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமும் உள்ளது. சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங்கிற்கு இந்த சலுகையை கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.
வெற்றி பெற்று முதல்வரான தமாங்
சிக்கிம் மாநில தற்போதய முதல்வர் பிரேம்சிங் தமாங் ஊழல் வழக்கில் சிக்கி கடந்த 2017 ஆகஸ்ட் முதல், 2018 ஆகஸ்ட் வரை ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தவர். கடந்த, 2019ம் ஆண்டில் நடந்த, சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலில், இவரது தலைமையிலான சிக்கிம் கிராந்திகரி மோர்சா கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்றது. தேர்தலில் போட்டியிடாமலேயே, 2019 மே மாதம், முதல்வரானார் தமாங். தேர்தல் ஆணையத்தின் தயவினால் இவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சசிகலா தலைமையில் ஆட்சி
அந்த நம்பிக்கையில்தான் சசிகலாவும் தேர்தலில் போட்டியிடுவார் எனக்கு கணக்கு போட்டு வருகிறார் டிடிவி தினகரன். சிறையில் இருந்து சசிகலா விடுதலையான நாளில் இருந்தே அதிமுகவை கைப்பற்றுவோம் என்றும் சசிகலா தலைமையில் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என்று கூறி வருகிறார் டிடிவி தினகரன்.
சசிகலாவிற்கு சாதகமா? பாதகமா?
இதுவரை மக்கள் செல்வாக்கு பெற்ற ஒருவர்தான் தமிழக முதல்வர் நாற்காலியில் அமர முடிந்தது. ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் அனைவரும் ஏதோ ஒருவிதத்தில் மக்களின் செல்வாக்கைப் பெற்று முதல்வரானவர்கள்.
மக்கள் செல்வாக்கு
ஜெயலலிதா சிறை சென்ற போது, அவர் மறைந்த போதும் முதல்வரானவர் ஓ.பன்னீர் செல்வம். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற பின்னர்தான் இரண்டு முறை ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். நாளடைவில் மக்கள் செல்வாக்கும் அவருக்கு தானாக கிடைத்தது.
சசிகலாவிற்கு பாதகம்
ஒருவரின் ஜாதகத்தில் அரசுக் கட்டிலில் அமரும் யோகம் இருந்தால்தான் இது சாத்தியமாகும். கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீர் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி. நான்கு ஆண்டு கால ஆட்சியில் மக்களின் செல்வாக்கை பெற்றுள்ளார். ஒருவர் மக்கள் செல்வாக்கு பெற சுக்கிரனும், புதனும், சந்திரனும் மிக அவசியம். சசிகலாவின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாகியும், புதன் பன்னிரண்டிலும், சந்திரன் எட்டில் மறைந்தும், அம்சத்தில் நீசமாகியும் நின்று இருப்பதால், இவருக்கு மக்கள் செல்வாக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கிரகங்கள் கூட்டணி
சசிகலாவின் ஜாதகத்தில் அரச கிரகமான சூரியன் ராசியில் ஆட்சியாகி, அம்சத்தில் உச்சமாகி, சனியும் பலமாகி இந்த அரச யோகத்தைக் கொடுத்துள்ளனர். கோச்சார ரீதியாக இப்போது கிரகங்கள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் இணைந்துள்ளன.
அரசியல் லாபம் கிடைக்குமா?
மீனம் ராசியில் பிறந்த சசிகலாவிற்கு இப்போது 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் 6 கிரகங்கள் இணைந்துள்ளன. சூரியன், சனி, குரு, புதன்,சுக்கிரன், சந்திரன் என கிரகங்கள் இணைந்து ஒருவித கிரக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. புதன் வக்ரமடைந்து சஞ்சரிக்கிறார். இந்த கிரகங்களின் கூட்டணியால் அவருக்கு அரசியல் வாழ்வின் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்பதே ஜோதிடர்களின் கருத்தாகும்.